நாகர்கோவில், ஏப். 13 –
கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெற உள்ள தேர்தலை முன்னிட்டு தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அலுவலர்கள், காவல்துறை மற்றும் அத்தியாவசிய துறையினர் தங்களது தபால் வாக்குகளை பதிவு செய்ய சிறப்பு வாக்குப்பதிவு வசதி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இது குறித்த விரிவான கால அட்டவணையை மாவட்ட நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ளது.
அந்த வகையில் வாக்குப்பதிவு அலுவலருக்கான பயிற்சி வகுப்புகளில் கலந்து கொள்ளும் அலுவலர்கள் தங்களது தபால் வாக்கினை பதிவு செய்ய அந்தந்த பயிற்சி மையங்களில் வாக்குப்பதிவு வசதி மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. தேர்தல் நாளில் பணியில் இருக்க வேண்டிய ரயில்வே, அகில இந்திய வானொலி, கடல் சார்ந்த துறை, விமான நிலைய ஆணையம் செய்தி மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம், ஊடகவியலாளர்கள், அரசு போக்குவரத்து கழகம், மின்சார வாரியம், தீயணைப்பு மற்றும் மீட்பு பணித்துறை, சிறைத்துறை மற்றும் போக்குவரத்து காவல்துறை ஆகிய அத்தியாவசிய துறைகளை சேர்ந்த பணியாளர்கள் தபால் வாக்களிக்க சிறப்பு ஏற்ப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இவர்கள் அந்தந்த தேர்தல் அலுவலகங்களில் அமைந்துள்ள வசதி மையங்களில் 17, 18 மற்றும் 19 ஆகிய தேதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குகள் பதிவு செய்யலாம். தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படும் காவல்துறையினர் மற்றும் இதர பணியாளர்கள் வாக்களிக்க ஏதுவாக தேர்தல் நடத்து அலுவலர் அலுவலகங்களில் 20, 21, 22 ஆகிய நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 5. 45 மணி வரை வாக்குப்பதிவு செயல்படும்.
இந்த வாக்குப்பதிவு நிகழ்வுகள் அனைத்தும் முழுமையாக சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு வீடியோ பதிவு செய்யப்படும். அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் இந்த நிகழ்வை பார்வையிடலாம்.


