நாகர்கோவில், ஜன. 26 –
நாட்டின் 77வது குடியரசு தின விழா இன்று 26ம் தேதி கொண்டாடப்படுகிறது. குமரி மாவட்டம் நிர்வாகம் சார்பில் நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கில் நடக்கும் குடியரசு தின விழாவில் கலெக்டர் அழகு மீனா தேசியக்கொடியை ஏற்றி வைத்து போலீசாரின் அணிவகுப்பு மரியாதை ஏற்றுக் கொள்கிறார்.
இதில் மாவட்ட எஸ்பி ஸ்டாலின் மற்றும் அதிகாரிகள் கலந்து கொள்கிறார்கள். மாணவ மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடக்கின்றன. மேலும் வீர தீர செயல் புரிந்தவர்களுக்கு விருதுகளும் வழங்கப்பட உள்ளன. சிறப்பாக பணியாற்றிய போலீசருக்கு முதலமைச்சர் பதக்கம் வழங்கப்படுகிறது.
குடியரசு தின விழா நடைபெறும் நாகர்கோவில் அண்ணா விளையாட்டரங்கத்தில் மின்விளக்கு அலங்காரங்கள் உட்பட பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நேற்று காலையில் ஸ்டேடியத்தில் பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டனர். குடியரசு தினம் முன்னிட்டு 1500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள். ரயில் நிலையங்கள், பஸ் நிலையங்களில் போலீசார் சோதனை மேற்கொண்டு வருகிறார்கள்.
மேலும் கடலோர பகுதிகளிலும், கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை, விவேகானந்தர் நினைவு மண்டபம் இடையிலான கண்ணாடி பாதத்திற்கும் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.



