கன்னியாகுமரி, நவ. 18 –
அஞ்சுகிராமம் அருகே நெல்லை மாவட்டம் செட்டிகுளத்தை சேர்ந்தவர் வெல்டிங் தொழிலாளி பால்கணேஷ் (28). இவருக்கு திருமணம் முடிந்து 15 நாட்கள் ஆகிறது. இந்நிலையில் தனது புது மனைவியுடன் நேற்று இரவு சுமார் எட்டு மணி அளவில் கன்னியாகுமரியில் உள்ள தனது மனைவி வீட்டிற்கு செல்வதற்காக காரில் வந்து கொண்டிருந்தார்.
அஞ்சுகிராமம் சந்திப்பு பகுதியில் வந்ததும் மாமியார் வீட்டிற்கு பொருட்கள் வாங்குவதற்காக காரில் இருந்து இறங்கினார். அப்போது அவரது செல்போன் தவறி கீழே விழுந்து விட்டது. இதனை அறியாத அவர் கடையில் சென்று பொருட்களை வாங்கிவிட்டு பொருட்களுக்கு பணம் கொடுப்பதற்காக செல்போனை தேடிய போது செல்போன் தவறியது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்தவர் அந்த பகுதிகளில் தேடிப் பார்த்தார். ஆனால் செல்போன் கிடைக்கவில்லை.
இந்நிலையில் நெல்லை மாவட்டம் யாக்கோபுரத்தைச் சார்ந்த கோழிப்பண்ணை அதிபர் செல்வகுமார் (38) தனது நண்பர் ரமேஷ் என்பவருடன் அஞ்சுகிராமம் சந்திப்பில் உள்ள கடையில் குழந்தைகளுக்கு பள்ளிக்கு கொடுத்து விடுவதற்கு தேவையான தின்பண்டங்கள் வாங்குவதற்காக வந்துள்ளார். அப்போது அந்தப் பகுதியில் கீழே கிடந்த விலை உயர்ந்த செல்போனை கண்டு எடுத்தவர் உடனடியாக அஞ்சுகிராமம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.
இந்நிலையில் தனது செல்போனை காணாமல் தேடித் தவித்துக் கொண்டிருந்த பால் கணேஷ் தனது மனைவியின் செல்போனிலிருந்து தொலைந்து போன தனது செல்போனிற்கு தொடர்பு கொண்டார். அப்போது அந்த செல்போன் அஞ்சுகிராமம் காவல் நிலையத்தில் இருப்பதாக போலீசார் கூறினர். உடனடியாக காவல் நிலையத்திற்கு வந்தார். தொடர்ந்து அஞ்சுகிராமம் இன்ஸ்பெக்டர் செல்வகுமார் மற்றும் சிறப்பு உதவி ஆய்வாளர் இருதயதாஸ் ஆகியோர் தவறிய செல்போன் குறித்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் தொலைந்து போன செல்போன் பால் கணேஷ்க்கு உரியது என்பது விசாரணையில் தெரியவந்தது. உடனே இன்ஸ்பெக்டர் செல்வகுமார் செல்போனை உரியவரிடம் ஒப்படைத்தார். தொடர்ந்து இன்ஸ்பெக்டர் கீழே கிடந்து எடுத்த விலை உயர்ந்த செல்போனை நேர்மையாக காவல் நிலையத்தில் ஒப்படைத்த செல்வகுமாரை பாராட்டி பரிசு வழங்கி கௌரவப்படுத்தினார்.



