நாகர்கோவில், ஏப். 14 –
பாரத பிரதமர் நரேந்திர மோடி நாளை 15ம் தேதி நாகர்கோவில் வருகிறார். அவர் நாகர்கோவில் மாநகரின் முக்கிய சாலைகளான செட்டிக்குளம், வேப்பமூடு சந்திப்பு, மணிமேடை சந்திப்பு, வடசேரி வரை தேர்தல் பிரச்சாரம் செய்ய இருப்பதால், 15.04.2026 நாளை மாலை 12 மணி முதல் 7 மணி வரை கீழ்க்கண்டவாறு போக்குவரத்து மாற்றம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே வெளியூர் செல்பவர்கள், ரயில் நிலையம், விமான நிலையம் செல்பவர்கள் மற்றும் குடும்ப நிகழ்ச்சிகளுக்கு செல்பவர்கள் தங்களது பயணநேரத்தை முன்கூட்டியே மாற்றம் செய்து திட்டமிட்டுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
பார்வதிபுரம், வெட்டூர்ணிமடம், பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி சாலை, கிருஷ்ணன்கோயில், வடசேரி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து வெளிமாவட்டங்களுக்கு செல்லும் வாகனங்கள் வெட்டூர்ணிமடம், பார்வதிபுரம், களியங்காடு, இறச்சகுளம், புத்தேரி, அப்டா வழியாக நான்கு வழிச்சாலையில் செல்ல வேண்டும்.
கோட்டார், செட்டிகுளம், ராமன்புதூர், பால்பண்ணை, பார்வதிபுரம், வடசேரி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து கன்னியாகுமரி, அஞ்சுகிராமம், கூடங்குளம் செல்லும் வாகனங்கள் டெரிக் ஜங்சன், அனந்தன் பாலம் சானல்கரை, கோணம் ஆத்துப்பாலம் சானல்கரை, தொல்லவிளை சானல்கரை, வல்லன் குமாரவிளை சானல்கரை, வேதநகர், பறக்கை செல்ல வேண்டும் அல்லது பட்டகசாலியன்விளை, இருளப்பபுரம், பறக்கை ரோடு சந்திப்பு, நாயுடு மருத்துவமனை வழியாக வழியாக செல்ல வேண்டும்.
திருவனந்தபுரம், மார்த்தாண்டம். தக்கலையிலிருந்து திருநெல்வேலி செல்லும் வாகனங்கள், களியங்காடு, இறச்சகுளம், புத்தேரி ரோடு, அப்டா வழியாக நான்கு வழிச்சாலையில் செல்ல வேண்டும். நாகர்கோவில் வழியாக கன்னியாகுமரி செல்லும் சுற்றுலா வாகனங்கள் மற்றும் பிற வாகனங்கள், களியங்காடு, இறச்சகுளம், புத்தேரி ரோடு, அப்டா மார்கெட் சந்திப்பு, தேரேக்கால் புதூர், புதுக்கிராமம், தேரூர். சுசீந்திரம், மகாதானபுரம் வழியாகவும் கன்னியாகுமரி சென்றடையலாம்.
நாகர்கோவிலிலிருந்து கோட்டார் ரயில் நிலையம் செல்லும் வாகனங்கள் அனைத்தும் பார்வதிபுரம், பெருவிளை, ஆசாரிபள்ளம், அனந்தன்பாலம் சானல்கரை, கோணம் ஆத்துப்பாலம் சானல்கரை, தொல்லவிளை சானல்கரை, வல்லன் குமாரவிளை சானல்கரை, இளங்கடை, பறக்கை ரோடு சந்திப்பு, நாயுடு மருத்துவமனை, ரயில்வே ரோடு வழியாக ரயில் நிலையம் செல்ல வேண்டும்.
அண்ணா பேருந்து நிலையத்திலிருந்து ராஜாக்கமங்கலம், குளச்சல், ஆசாரிப்பள்ளம், பார்வதிபுரம், திங்கள் நகர், தக்கலை, மார்த்தாண்டம் மார்க்கமாக செல்லும் அனைத்து அரசு பேருந்துகளும் வடசேரி பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படும்.
மேலும் அண்ணா பேருந்து நிலையத்திலிருந்து கன்னியாகுமரி, அஞ்சுகிராமம், கூடங்குளம், தெங்கம்புதூர், மணக்குடி மார்க்கமாக செல்லும் பேருந்துகள் கோட்டார் ரயில் நிலைய வாயிலில் தற்காலிகமாக செயல்படும் பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படும்.
மேற்படி வழித்தட மாற்றமானது 15.04.2026 அன்று மாலை 12 மணி முதல் 7 மணி வரை அமல்படுத்தப்படும். மேற்படி போக்குவரத்து மாற்றத்திற்கு, பொதுமக்கள் ஒத்துழைப்பு நல்குமாறு இதன் மூலம் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
மேலும் பொன்னப்பநாடார் காலனி, கார்மல் நகர் முதல் செட்டிக்குளம் சாலை. செட்டிகுளம் முதல் வேப்பமூடு சாலை, வேப்பமூடு முதல் வடசேரி சாலை, வடசேரி முதல் ஒழுகினசேரி சாலை, ஒழுகினசேரி முதல் கோட்டார் காவல் நிலையம் சாலை, கோட்டார் காவல் நிலையம் முதல் சேவியர் சந்திப்பு சாலை, சேவியர் சந்திப்பு சாலை முதல் செட்டிக்குளம் சந்திப்பு வரையுள்ள சாலைகளில் வாகனங்கள் நிறுத்து தடை செய்யப்பட்டுள்ளது என அறிவிப்பு வெளியாகி உள்ளது.


