நாகர்கோவில், ஜூலை 29 –
குமரி மாவட்ட கலெக்டர் அழகுமீனா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டில் சொந்த கட்டிடங்களில் இயங்கும் கிறிஸ்தவ தேவாலயங்களை பழுதுபார்த்தல், புனரமைத்தல் பணிகள் மேற்கொள்ள மானிய தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தேவாலயங்கள் 10 ஆண்டுகளுக்கு மேலாக சொந்த கட்டிடத்தில் இயங்கி இருக்க வேண்டும்.
தேவாலயத்திற்காக வெளிநாட்டில் இருந்து எந்தவித நிதி உதவியும் வாங்கியிருக்க கூடாது. அவ்வாறு ஒரு தேவாலயத்திற்கு மானிய தொகை வழங்கிய பின்னர் 5 வருடத்திற்கு தேவாலயம் மானிய தொகை வேண்டி விண்ணப்பிக்க தகுதியற்றது என்பது உட்பட விதிமுறைகள் உள்ளது. இந்த திட்டத்தின் கீழ் கூடுதல் பணிகள் மேற்கொள்ளவும் கட்டிடத்தின் வயதிற்கு ஏற்ப மானிய தொகை உயர்த்தியும் அரசு ஆணையிட்டுள்ளது.
கூடுதலாக மேற்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ள பணிகள்: தேவாலயங்களில் பீடம் கட்டுதல், கழிவறை வசதி அமைத்தல், குடிநீர் வசதிகள் உருவாக்குதல், சுவிசேஷம் வாசிக்கும் ஸ்டாண்ட், மைக் செட் மற்றும் ஒலிபெருக்கி நற்கருணை பேழை பீடம், திருப்பலிக்கு தேவையான பாத்திரங்கள், சுரூபங்கள், மெழுகுவர்த்தி ஸ்டாண்டுகள், மற்றும் பக்தர்கள் அமர்ந்து முழங்காலிட்டு இருக்க தேவையான பெஞ்சுகள் போன்ற ஆலயங்களுக்கு தேவையான உபகரணங்கள் மற்றும் தேவாலயத்திற்கு சுற்றுச் சுவர் வசதி அமைத்தல் ஆகியவை மேற்கொள்ளலாம்.
தேவாலய கட்டிடத்தின் வயதிற்கு ஏற்ப உயர்த்தப்பட்டுள்ள மானிய தொகை விவரம்:
10 முதல் 15 வருடம் வரை 10 லட்சம். 15 முதல் 20 வருடம் வரை 15 லட்சம். 20 வருடத்திற்கு மேல் இருப்பின் 20 லட்சம். இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை அணுகலாம். இவ்வாறு செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.