சென்னை, மார்ச் 03 –
செரிமான மண்டலத்தின் உட்புறத்தில் ஏற்படும் ரத்தக்கசிவானது, ஒரு பொதுவான அவசர மருத்துவ பாதிப்பு நிலையாகும். இதற்கு சரியான நேரத்திற்குள் பரிசோதனை, ஒருங்கிணைந்த பராமரிப்பு மற்றும் இரத்தக்கசிவை சரிசெய்வதற்கு விரிவான சிகிச்சை அளிப்பதற்காக, காவேரி மருத்துவமனை குழுமம் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் பிரத்யேக ‘ஜிஐ ப்ளீடு’ சிகிச்சை மையங்களை தொடங்கியுள்ளது.
தமிழ்நாடு மற்றும் கர்நாடகா ஆகிய இரு மாநிலங்களிலும் உள்ள 12 மருத்துவமனைகள் மூலம், குடல் இரத்தக்கசிவால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் தங்கள் வாழ்விடங்களுக்கு அருகிலேயே தனிச்சிறப்பான, பல்துறைகளின் ஒருங்கிணைக்கப்பட்ட மருத்துவப் பராமரிப்பை பெறுவது உறுதி செய்யப்படுகிறது.
இந்த சிறப்பு சிகிச்சை மையங்கள், அவசர சிகிச்சை மருத்துவர்கள், இரைப்பை-குடல் நிபுணர்கள், தீவிர சிகிச்சை நிபுணர்கள், கதிரியக்க நிபுணர்கள் மற்றும் அறுவை சிகிச்சை நிபுணர்களின் ஒருங்கிணைந்த செயல்பாட்டின் மூலம் சிகிச்சை அளிக்கின்றன. அவசர சிகிச்சைப் பிரிவுக்கு நோயாளி வந்து சேர்வது முதல், ஆபத்தை மதிப்பீடு செய்தல், தீவிர சிகிச்சை பிரிவு அல்லது வார்டில் அனுமதித்தல், எண்டோஸ்கோபி அல்லது கதிரியக்க சிகிச்சைகள் அளித்தல் மற்றும் குணமடைந்து மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவது வரை நோயாளிகள், தெளிவாக வரையறை செய்யப்பட்ட நடைமுறைகளை பின்பற்றி மிக சரியான முறையில் பராமரிப்பை பெறுகின்றனர்.



