களியக்காவிளை, ஏப். 8 –
களியக்காவிளை தேர்வு நிலை பேரூராட்சிக்குட்பட்ட ஒற்றப்பன விளை, பகுதியை சார்ந்தவர் மணி (60). இவரது மனைவி செல்வின் மேரி (51). இந்த தம்பதிகளுக்கு 2 ஆண் பிள்ளைகள் உள்ளனர். மணி சவுதி அரேபியாவில் பணிபுரிந்து வந்தார். சுமார் 20 வருடத்திற்கு முன் உடல்நிலை சரியில்லாத நிலையில் ஊருக்கு வந்து கூலி வேலை செய்து வந்தார். சுமார் கடந்த 18 வருடங்களாக பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டு வீட்டில் முடங்கியுள்ளார்.
இவரது மனைவி செல்வின் மேரி குடும்ப சூழ்நிலையை கருத்தில் கொண்டு முறுக்கு சுற்றும் கூலி வேலைக்கு சென்று தனது கணவர் மற்றும் இரண்டு பிள்ளைகளை பாதுகாத்து வந்தார். இவர்களின் இரண்டாவது மகன் றோஜித் ஜோய் (21) திருத்துவபுரம் பகுதியில் அமைந்துள்ள தனியார் பள்ளியில் +2 வரை கல்வி கற்றுள்ளார்.
தொடர்ந்து திருவனந்தபுரத்தில் அனிமேஷன் கல்வி கற்றுள்ளார். தற்போது இரண்டு கிட்னிகள் மற்றும் லிவர் பாதிக்கப்பட்டுள்ளார். தற்போது வேலூரில் அமைந்துள்ள ஆஸ்பத்திரியில் சிகிட்சை பெற்று வருகிறார். இவருக்கு கிட்னியுடன் லிவர் மாற்றி வைத்து சிகிட்சை அளிக்க 13 லட்சம் ரூபாய் தேவைப்படுகிறது. இத்தனை ரூபாய் செலவு செய்ய முடியாமல் மணி மற்றும் செல்வின் மேரி குடும்பத்தினர் தவித்து வருகின்றனர்.
இது குறித்து பக்க வாதத்தால் பாதிக்கப்பட்டுள்ள மணி கண்ணீர் மல்க கூறியதாவது: நான் சவுதி அரேபிய நாட்டில் வேலை செய்து வந்தேன். உடல் நலக்குறைவால் ஊருக்கு திரும்பி வந்து கூலி வேலை செய்து வந்தேன். கடந்த 18 வருடங்களாக பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டு வீட்டில் முடங்கியுள்ளேன். எனது மனைவி செல்வின் மேரி கூலி வேலை செய்து வந்தார்.
தற்போது என்னையும் கிட்னி மற்றும் லிவர் நோயால் பாதிக்கப்பட்ட எனது இரண்டாவது மகனையும் கவனிக்க வேண்டியிருப்பதினால் மனைவி வேலைக்கு செல்வதில்லை. எனது இரண்டாவது மகனுக்கு இரண்டு கிட்ணிகள் மற்றும் லிவர் பாதிக்கப்பட்டுள்ளது. இதனை மாற்றி வைக்க சுமார் 13 லட்சம் ரூபாய் வரை செலவு ஆகும் என வேலுர் ஆஸ்பத்திரியில் கூறியுள்ளனர். தற்போது எனது மூத்த மகன் கூலி வேலை செய்து கொண்டு வரும் ருபாயில் வாழ்ந்து வருகிறோம் என கண்ணீர் மல்க கூறினார்.



