கருங்கல், செப்.11:
மகாகவி பாரதியாரின் நினைவு தினத்தையொட்டி, கருங்கல் பாலூரில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் (தமுஎகச) சார்பில் நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. பாரதியாரின் தேசப்பற்று, பெண் விடுதலை, தீண்டாமை ஒழிப்பு மற்றும் சமூக சீர்திருத்தக் கொள்கைகளை நினைவுகூரும் வகையில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.
தமுஎகச கருங்கல் கிளைச் செயலாளர் ஓலைக்கோடு ஜாண் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பாரதியாரின் உருவப்படத்துக்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டு, உறுதிமொழி ஏற்கப்பட்டது. கிளை பொருளாளர் கர்னல் வினோதேவராஜ் முன்னிலை வகித்தார்.
மாவட்ட செயலாளர் அருள்மனோ, மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஹசன் ஆகியோர் பாரதியாரின் இலக்கியப் பங்களிப்பு மற்றும் சமூக சிந்தனைகள் குறித்து நினைவுதின உரையாற்றினர். மாவட்ட இணைச் செயலாளர் எம்.ஏ.சாந்தகுமார் தேச ஒற்றுமையை வலியுறுத்தி உறுதிமொழியை வாசித்தார்.
பாரதியார் தனது கவிதைகள் மற்றும் பாடல்கள் மூலம் விடுதலை உணர்வை மக்களிடம் ஏற்படுத்தியதுடன், சமூகத்தில் நிலவிய ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிராகவும் குரல் கொடுத்தார். அவரது படைப்புகள் இன்றளவும் தமிழ் இலக்கிய உலகில் முக்கியத்துவம் பெற்றுள்ளன என நிகழ்ச்சியில் எடுத்துரைக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் புதுக்கடை சத்தியதாஸ், வழக்கறிஞர் ராஜா, சாமுவேல்ரவி, சோபனராஜ், சரவணன், பிரதாப், எட்வின்சன், ஸ்மைல், மத்தியாஸ், ராஜேஷ், ஜெனிஷ், ராஜதுரை, தனபால், பன்னீர்செல்வம், பென்சாம்ஜோ, திஜு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.



