கன்னியாகுமரி, ஜூன் 19 –
கன்னியாகுமரியில் இப்போது பேருந்து நிலையமாக பயன்படுத்தப்படும் இடமானது போக்குவரத்துக் கழகத்திற்கு சொந்தமான பணிமனை மற்றும் பேருந்துகள் நிறுத்தி வைக்கும் இடம் ஆகும். இந்தப் பகுதி தான் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை பேருந்து நிலையம் என்ற பெயரில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. பெயரளவில் பேருந்து நிலையமாக இருந்தாலும் இந்த வளாகம் பேருந்து நிலையத்திற்கான அடிப்படை கட்டமைப்புகள் எதுவுமின்றி இயங்கி வருவதற்கு காரணம் இது நகராட்சியின் கட்டுப்பாட்டில் இல்லாமல் போக்குவரத்து துறையின் கீழ் இருப்பதே ஆகும். உள்ளாட்சித் துறை என்பது மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை செயல்படுத்துவதற்காகவே இயங்கும் அமைப்பு. அத்தகைய அமைப்பின் கீழ் ஒரு பேருந்து நிலையம் இருந்தால் தான் அதற்கான சுகாதாரம், கழிவு மேலாண்மை, குடிநீர், கழிவறைகள், பொதுமக்களுக்கான ஓய்வறைகள், தாய்மார்களுக்கான தனி அறைகள், மாற்றுத் திறனாளிகள் பயன்படுத்த ஏதுவான கட்டமைப்பு வசதிகள் போன்ற பல அடிப்படை வசதிகளைத் திட்டமிடவும் செயல்படுத்தவும் இயலும். மாறாக இது போக்குவரத்துத் துறையின் கீழ் இருப்பதால் இத்தகைய அடிப்படைத் தேவைகளை அத்துறையானது பொருட்படுத்துவதோ, பொறுப்பெடுப்பதோ இல்லை. எனவே தான் பேருந்து நிலையம் தற்போது தார் தளங்கள் பெயர்ந்து மழைநீர் தேங்கி பொதுமக்கள் பயன்படுத்துவதற்கு ஏதுவான நிலையில் இல்லாமல் இருக்கிறது. தற்போது சட்டமன்ற உறுப்பினராக இருப்பவரோ இதற்கு முன் சட்டமன்ற உறுப்பினர்களாக இருந்தவர்களோ இத்தனை நாள் இதைக் கண்டுகொள்ளாமல் இருந்திருக்கிறார்கள் என்பது மக்கள் நலன் மீதும் கன்னியாகுமரியின் வளர்ச்சியின் மீதும் இவர்களுக்கு இருக்கும் அலட்சியப்போக்கைக் காட்டுகிறது. எனவே விரைந்து நடவடிக்கை எடுத்து கன்னியாகுமரி நகராட்சியில் புதிய பேருந்து நிலையத்திற்கான இடத்தைக் கண்டறிந்து கட்டமைக்க வேண்டும். அது சாத்தியமில்லாத சூழலில் ஏற்கனவே பேருந்து நிலையமாக இயங்கி வரும் போக்குவரத்துத் துறையின் இடத்தை நகராட்சி நிர்வாகத்திற்கு வழங்கி அதில் அனைத்து வசதிகளையும் ஏற்படுத்தி பொதுமக்களுக்கும் சுற்றுலாப் பயணிகளுக்கும் சிறந்த சேவையை வழங்கும் ஒரு பேருந்து நிலைய வளாகமாக மாற்ற வேண்டும் என நாம் தமிழர் கட்சி சார்பாக கோரிக்கை விடுக்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.