கன்னியாகுமரி, ஜூலை 2 –
கன்னியாகுமரி கடற்கரை சாலை நடைபாதையை ஆக்கிரமித்து அமைக்கப்பட்ட கடைகளை இன்று அகற்றி நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது.
கன்னியாகுமரி அய்யன் திருவள்ளுவர் சாலையில் உள்ள காந்தி மண்டபம் தொடங்கி காமராஜர் மண்டபம், சன்செட் பாயிண்ட் வரை உள்ள நடைபாதையில் சுற்றுலா பயணிகள் நடந்து செல்ல முடியாத அளவில் நடைபாதை வியாபாரிகள் ஆக்கிரமித்து வியாபாரம் செய்து வந்தனர். சுற்றுலா பயணிகள் நடந்து செல்ல அமைக்கப்பட்டுள்ள நடைபாதை கடைகளை அகற்றி சுற்றுலா பயணிகளுக்கு நடந்து செல்ல வழிவகை செய்ய வேண்டும் என்று நகராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நிலையில் இந்த சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நகராட்சி நிர்வாகம் முடிவு செய்து ஆக்கிரமிப்பு கடை உரிமையாளர்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டது. வருவாய்துறை, காவல்துறையுடன் இணைந்து நகராட்சி நிர்வாகம் ஆக்கிரமிப்பு அகற்றும் நடவடிக்கையை மேற்கொள்ளும் என்று அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று காலை கன்னியாகுமரி டிஎஸ்பி ஜெயச்சந்திரன், கன்னியாகுமரி நகராட்சி ஆணையர் பட்டுசாமி, அகஸ்தீஸ்வரம் தாசில்தார் ஆறுமுகம் தலைமையில் நகராட்சி நகரமைப்பு ஆய்வாளர் ஷேக் அப்துல் காதர், சுகாதார மேற்பார்வையாளர் பிரதீஷ் ஆகியோர் மேற்பார்வையில் நகராட்சி ஊழியர்கள் அளவீடு செய்யப்பட்டு கடைகள் அகற்றப்பட்டது. பாதுகாப்பிற்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.
நகராட்சி ஆணையர் பட்டுசாமி கூறும் போது: காந்தி மண்டபம் முதல் காட்சிகோபுரம் வரை அய்யன் திருவள்ளுவர் சாலையில் நடைபாதையில் சுற்றுலா பயணிகள் நடந்து செல்ல முடியாத அளவுக்கு சுமார் 300 நடைபாதை கடைகள் மற்றும் உருட்டு வண்டி கடைகள் இருந்தது. மாவட்ட கலெக்டரின் உத்தரவின் பேரில் இந்த கடைகள் அகற்றப்பட்டுள்ளது.கடைகளை அகற்றுவது தொடர்பாக கடை உரிமையாளர்களுக்கு ஏற்கனவே அறிவிப்பு வழக்கப்பட்டதால் பெரும்பாலான கடை உரிமையாளர்கள் தாமாகவே கடையை அகற்றினர். சில கடைகள் அகற்றப்படவில்லை. அந்த கடைகளை போலீஸ் பாதுகாப்புடன் நகராட்சி ஊழியர்கள் கடையை அகற்றினர்.
அகற்றப்பட்ட இடத்தில் கடை நடத்த எந்த அனுமதியும் கிடையாது. அகற்றபட்ட இடத்தில் மீண்டும் கடை நடத்த முயன்றால் போலீசில் புகார் செய்யப்பட்டு வழக்கு பதிவு நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.



