கன்னியாகுமரி, ஆக. 25:
கன்னியாகுமரி ஹைகிரவுண்ட் பகுதியைச் சேர்ந்த ஜவான் லூயி (45), மறக்குடி தெருவைச் சேர்ந்த எட்வின் பிரபு (42) ஆகிய இருவரும் சவுதி அரேபியாவில் சாலை விபத்தில் உயிரிழந்தனர்.
இருவரும் சவுதி அரேபியாவில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தனர். இதில் ஜவான் லூயி பல ஆண்டுகளாக சவுதியில் பணியாற்றி வந்ததுடன், கன்னியாகுமரி பகுதியைச் சேர்ந்த பலரை வெளிநாடுகளில் வேலைக்கு அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், நேற்று முன்தினம் அலுவல் நிமித்தமாக இருவரும் காரில் சென்றுள்ளனர். ஜவான் லூயி காரை ஓட்டிச் சென்றதாக கூறப்படுகிறது. கார் கோபர்-ரியாத் சாலையில் சென்று கொண்டிருந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது.
இந்த விபத்தில் ஜவான் லூயி மற்றும் எட்வின் பிரபு ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
உயிரிழந்த இருவருக்கும் திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். சவுதி அரேபியாவில் ஒன்றாக பணியாற்றிய கன்னியாகுமரியைச் சேர்ந்த இருவர் விபத்தில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இருவரது உடல்களையும் சொந்த ஊருக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளில் உறவினர்கள் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.



