கன்னியாகுமரி, மே 13 –
கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள பாறையில் சுவாமி விவேகானந்தர் மண்டபமும் அதன் அருகில் உள்ள மற்றொரு பாறையில் 133 அடி உயர திருவள்ளுவர் சிலையும் எழுப்பப்பட்டுள்ளது. இவற்றை இணைக்கும் வகையில் கடல் நடுவில் கண்ணாடி பாலம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த கண்ணாடி பாலம் திறக்கப்பட்ட பிறகு கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமாக உள்ளன. தினமும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா ஆயிரக்கணக்கான பயணிகள் படகில் சென்று இந்த கண்ணாடி பாலத்தை பார்த்து வருகிறார்கள்.
இவற்றை பார்வையிட செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு வசதியாக தமிழக அரசு நிறுவனமான பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் படகு போக்குவரத்தை நடத்தி வருகிறது. காலை 8 மணியில் இருந்து மாலை 4 மணி வரை இடைவேளையின்றி படகு போக்குவரத்து இயக்கப்படுகிறது. மாலை 4 மணிக்கு பின்பும் வார விடுமுறை நாட்களில் கன்னியாகுமரியில் கட்டுக்கடங்காத கூட்டம் காணப்படும். இதனால் கண்ணாடி பாலத்தை பார்க்க படகு துறையில் கூட்ட நெரிசல் ஏற்படுகிறது. சுற்றுலா பயணிகள் இந்த கூட்டநெரிசலை பார்த்து படகில் பயணம் செய்ய முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர். எனவே படகு போக்குவரத்து நேரத்தை நீட்டிக்க வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்தனர்.
இதைத்தொடர்ந்து குமரி மாவட்ட ஆட்சியர் அழகுமீனா அறிவுரையின் பேரில் பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் படகு போக்குவரத்து நேரத்தை கூடுதலாக ஒரு மணி நேரம் நீட்டிக்க உத்தரவிட்டுள்ளது. அதன்படி நேற்று முதல் சுற்றுலா பயணிகளுக்கு வசதியாக படகு போக்குவரத்து நேரம் காலை 8 மணிக்கு பதிலாக காலை 7 மணிக்கு படகு சேவை தொடங்கப்பட்டுள்ளது.



