கன்னியாகுமரி, பிப். 11 –
கன்னியாகுமரி ரதவீதியில் பகவதி அம்மன் கோவிலுக்கு சொந்தமான கன்னியம்பலம் என்ற கல் மண்டபம் உள்ளது. இந்த மண்டபத்தின் உள் பகுதியில் வலம்புரி விநாயகர் கோயில் அமைந்துள்ளது. இந்த கன்னியம்பலம் 4 பக்கமும் திறந்த வெளியாக காணப்படும். இதனால் பகவதி அம்மன் கோயிலுக்கு வரும் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளும் கன்னியம்பலத்துக்கு சென்று இளைப்பாறி வந்தனர்.
காலப்போக்கில் வியாபார நோக்கில் கன்னியம்பலத்தை சுற்றி ஏராளமான கடைகள் அமைக்கப்பட்டன. இதனால் கன்னியம்பலத்தின் 3 பக்கங்களும் அடைக்கப்பட்டு,அதனை சுற்றி ஏராளமான கடைகள் அமைக்கப்பட்டு வியாபாரம் நடைபெற்று வந்தது. இதனால்
பக்தர்களுக்கு பயன்பட்டு வந்த கன்னியம்பலம் மூடப்பட்டது. இந்த நிலையில் பழமை வாய்ந்த கன்னியம்பலம், மண்டபத்தை பாதுகாக்க வேண்டியும் புராதனமான இந்த மண்டபத்தை வியாபார ஸ்தலமாக மாற்றக்கூடாது என்றும் இந்த மண்டபத்தில் இருக்கின்ற அனைத்து கடைகளையும் அகற்ற வேண்டும் என்றும் மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கன்னியம்பலம் மண்டபத்தில் உள்ள கடை களை இடித்து அகற்ற வேண்டும் என்று உத்தர விட்டார்.
இதை தொடர்ந்து கடந்த மாதம் மண்டபத்தை மறைத்து கட்டப்பட்ட ஒரு ஓட்டல் மற்றும் கடை கன்னியாகுமரி நகராட்சி மூலம் இடித்து அகற்றப்பட்டது. இதற்கான அத்தாட்சிகள்’ மதுரை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இருப்பினும் மண்டபத்தில் உள்ள மற்ற 12 கடைகளையும் அகற்ற வேண்டும் என்று மதுரை உயர்நீதிமன்றம் அறநிலையத்துறைக்கு அறிவுரை வழங்கியது. இதைத் தொடர்ந்து கன்னியம்பலம் மண்டபத்தில் உள்ள 12 கடைகளையும் அகற்ற வேண்டும் என்று அறநிலையத்துறை நிர்வாகம் சார்பில் வியாபாரிகளுக்கு அறிவுரை வழங்கியது. நகராட்சியின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு
இதை கருத்தில் கொண்டு மாற்று இடம் கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கன்னியாகுமரியில் அனைத்து வியாபாரிகள் சங்கம் சார்பில் முழு கடையடைப்பு போராட்டம் நடந்தது.
கன்னியாகுமரி இந்து அறநிலையத்துறை இணை ஆணையர் ஜான்சிராணி,பகவதி அம்மன் கோவில் மேலாளர் ஆனந்த் மற்றும் ஊழியர்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கடைகளை அகற்றவும், கடைகளுக்கு சீல் வைக்கவும் முற்பட்டனர். இதனைத்தொடர்ந்து வியாபாரிகள் திரண்டு கன்னியம்பலம் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் கடைகளுக்குள் இருந்தவாறு சீல் வைக்க முடியாதபடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் சுற்றுலா தலமான கன்னியாகுமரி பரபரப்பாக காணப்படுகிறது. சன்னதி தெருவில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
கடையடைப்பின் காரணமாக கன்னியாகுமரி சன்னதி தெரு, பார்க்வியூ பஜார், காந்தி மண்டப பஜார், விவேகானந்தா ராக் ரோடு, மெயின் ரோடு, ரத வீதி உள்பட்ட பகுதிகளில் அனைத்து கடைகள் அடைக்கப்பட்டு வெறிச்சோடி காணப்படுகிறது.



