கன்னியாகுமரி, ஆக. 23 –
பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகிறார்கள். பண்டிகை கால தொடர் விடுமுறை நாட்கள், அரசு விடுமுறை நாட்கள் மற்றும் வார இறுதி விடுமுறை நாட்களிலும் பயணிகளின் வருகை அதிகரித்து காணப்படுகிறது.
இந்நிலையில் கன்னியாகுமரி மெயின் ரோடு, கடற்கரை சாலை மற்றும் காந்தி மண்டபம் பஜார் போன்ற பகுதிகளில் நடைபாதைகளை ஆக்கிரமித்து புதிதாக ஏராளமான கடைகள் முளைத்துள்ளன. நடைபாதைகளை ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ள இந்த கடைகளால் கூட்ட நேரங்களில் சாலைகளில் உள்ள நடைபாதைகளில் சுற்றுலா பயணிகள் நடந்து செல்வதற்கு மிகவும் சிரமப்படுகிறார்கள்.
இதற்கிடையில் அடுத்த மாதம் (செப்டம்பர்) ஓணம் பண்டிகை வருகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இதனை கருத்தில் கொண்டு கன்னியாகுமரியில் நடைபாதைகளை ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ள கடைகளை உடனடியாக அகற்ற வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் அழகுமீனா உத்தரவிட்டார்.
அதன்படி கன்னியாகுமரி நகராட்சி ஆணையர் கண்மணி அறிவுரையின் பேரில் நகர் அமைப்பு ஆய்வாளர் ஷேக் அப்துல்காதர், சுகாதார அதிகாரி அந்தோணி, நகராட்சி களப்பணி அலுவலர் கார்த்திகேயன், சுகாதார மேற்பார்வையாளர்கள் பிரதீஷ், சிவராமலிங்கம், நகராட்சி இளநிலை உதவியாளர்கள் சந்திரகுமார், சுதர்சிங் மற்றும் பணியாளர்கள், கன்னியாகுமரி கடற்கரை சாலை, காந்தி மண்டப பஜார், மெயின் ரோடு ஆகிய பகுதிகளில் நடைபாதைகளை ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ள கடைகளை உடனடியாக அகற்ற வேண்டும் என்று கடை கடையாக சென்று வியாபாரிகளுக்கு அறிவுரை வழங்கினர். மேலும் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் கன்னியாகுமரியில் நடைபாதைகளில் உள்ள ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றாவிட்டால் நகராட்சி நிர்வாகம் நேரடியாக ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபடும் என்று அதிகாரிகள் வியாபாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்தனர்.



