நாகர்கோவில், ஏப். 2 –
கன்னியாகுமரி மாவட்டத்தில் தேர்தலை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிமுறைகளை அமல்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளிலும் 18 பறக்கும் படைகள் மற்றும் 18 நிலையான கண்காணிப்பு படைகள், 8 மணிநேர சுழற்சி அடிப்படையில் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த குழுவினர் தேர்தல் விதிமீறல்களை தடுக்கவும் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்படும் பணம் மற்றும் பொருட்களை கைப்பற்றவும் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
அந்த வகையில் கடந்த 1ம் தேதி காலை 6 மணி முதல் இன்று 2ம் தேதி காலை 6 மணி வரையிலான 24 மணி நேரத்தில் நடத்தப்பட்ட சோதனையில் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.4 லட்சத்து 35 ஆயிரத்து 200 கைப்பற்றப்பட்டுள்ளது. இதில் பத்மநாதபுரம் தொகுதியில் 3லட்சத்து 82 ஆயிரத்து 900 ரூபாயும், விளவங்கோடு தொகுதியில் ரூ 52 ஆயிரத்து 300 ரூபாயும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
தேர்தல் அறிவிக்கப்பட்ட நாள் முதல் இதுவரை மாவட்டத்தில் ஒட்டுமொத்தமாக 47 லட்சத்து 23 ஆயிரத்து 880 ரூபாய் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்டதாக அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளது.



