ஈரோடு, ஆக 25.
ஈரோட்டில் மக்கள் சிந்தனைப் பேரவை சார்பில் நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சியில், நாசா விண்வெளி விஞ்ஞானி சரத் கிரிமாஜி கலந்து கொண்டு மாணவர்களிடையே உரையாற்றினார். இந்நிகழ்ச்சிக்கு மக்கள் சிந்தனைப் பேரவை தலைவர் ஸ்டாலின் குணசேகரன் தலைமை வகித்தார்.
தனது பள்ளிப் பருவத்தில் நீல் ஆம்ஸ்ட்ராங் நிலவில் காலடி வைத்த சம்பவம் ஏற்படுத்திய தாக்கமே விண்வெளித் துறையின் மீது ஆர்வத்தை ஏற்படுத்தியதாக சரத் கிரிமாஜி தெரிவித்தார். பின்னர் சென்னையில் கல்வி பயின்று, அமெரிக்காவில் உயர் கல்வி முடித்து, 1990ஆம் ஆண்டு நாசாவில் விஞ்ஞானியாக இணைந்ததாக கூறினார்.
சூப்பர்சோனிக் மற்றும் ஹைப்பர்சோனிக் விமானங்கள் தொடர்பான ஆய்வுகளில் பணியாற்றியதாகவும், மணிக்கு 18 ஆயிரம் கி.மீ. வேகத்தில் செல்லக்கூடிய விமானத்தை உருவாக்கும் ஆராய்ச்சியில் வெற்றி பெற்றதாகவும் அவர் தெரிவித்தார்.
தற்போது காலநிலை மாற்றம் மற்றும் கடல் மட்ட உயர்வால் ஏற்படும் பாதிப்புகளைத் தடுப்பது தொடர்பான ஆராய்ச்சிகளில் கவனம் செலுத்தி வருவதாக கூறினார். இந்தியாவில் கொல்கத்தா, மும்பை, கொச்சி உள்ளிட்ட கடற்கரை நகரங்கள் எதிர்காலத்தில் கடல் மட்ட உயர்வால் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.
“கனவு காணுங்கள்; தனித்திறன்களை வளர்த்துக் கொள்ளுங்கள்; கடின உழைப்பைக் கைவிடாதீர்கள்; சமூக மேம்பாட்டிற்காகச் சிந்தித்து செயல்படுங்கள்” என மாணவர்களுக்கு அவர் அறிவுரை வழங்கினார்.
45 ஆண்டுகளுக்குப் பிறகு ஈரோடு வந்திருப்பதாகவும், மனிதகுல நன்மைக்காக சுயநலமின்றி மேற்கொள்ளப்படும் ஆய்வுகளே மிகச் சிறந்த சேவை என்றும் சரத் கிரிமாஜி தெரிவித்தார்.



