கோவை, செப். 18 –
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் பகுதியில் 6 கிலோ 500 கிராம் கஞ்சாவை விற்பனைக்கு வைத்திருந்த கேரளா மாநிலத்தைச் சேர்ந்த ரஹீம் மகன் முனீர் (24) என்பவரை பெரியநாயக்கன்பாளையம் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் பொது ஒழுங்கு மற்றும் பொது சுகாதாரப் பராமரிப்பிற்கு பாதகமான செயலில் ஈடுபட்ட குற்றத்திற்காக முனீர் (24) மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.K.கார்த்திகேயன் பரிந்துரை செய்தார்.
அப்பரிந்துரையின் பேரில் கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் க. கிரியப்பனவர், மேற்கண்ட நபர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பித்தார். அவ்வுத்தரவின் அடிப்படையில் கஞ்சா வழக்கு குற்றவாளியான முனீர் (24) யை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தனர்.
மேலும் பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தாலோ, பொது சுகாதார பராமரிப்பிற்கு பாதகமாக செயல்பட்டாலோ அவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரித்துள்ளார்.



