சுசீந்திரம், பிப். 5 –
சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவில் தெற்கு பகுதியில் அரசு ஆரம்ப பள்ளி ஒன்று உள்ளது. இந்தப் பள்ளி ஒன்று முதல் ஐந்து வரை உள்ள தமிழ் வழிபயிலும் மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர்.
கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு சுசீந்திரம் பேரூராட்சி மூலம் பள்ளி வகுப்பறை சேதம் அடைந்து இருந்ததால் அதனை மாற்றி புதிதாக கட்டுவதற்கு ரூபாய் 11 லட்சத்திற்கு தெங்கம்புதூர் அருகே உள்ள கட்டிட ஒப்பந்தக்காரர் மூலம் டெண்டர் விடப்பட்டது. அதற்கான வேலை துவங்குவதற்காக டெண்டர் எடுத்த கட்டிட ஒப்பந்தக்காரர் கட்டிடத்தின் மேற்பகுதி அனைத்தையும் உடைத்து போட்டுள்ளார்.
ஆனால் ஆறு மாதம் ஆகியும் உடைத்து போடப்பட்ட கட்டிடத்தை கட்டுவதற்கு யாரும் வரவில்லை. உடைத்து போடப்பட்ட காங்கிரட் கற்கள், துருப்பிடித்த கம்பிகள் ஆங்காங்கே சிதறி கிடக்கின்றது. ஆரம்ப பள்ளி என்பதால் சிறிய மாணவ, மாணவிகள் கழிப்பறைக்கு செல்வதற்கும் வெளியே செல்வதற்கும் முடியாத சூழ்நிலையில் உள்ளனர்.
எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அரசு தொடக்கப் பள்ளியை வந்து ஆய்வு செய்து உடைக்கப்பட்ட பள்ளியை மீண்டும் விரைந்து கட்டு முடித்து குழந்தைகள் பயன்பெற செய்ய வேண்டும் என அப்பகுதி பொதுமக்களும் குழந்தைகளின் பெற்றோர்களும் கோரிக்கை வைக்கின்றனர்.



