நாகர்கோவில், பிப். 26 –
நாகர்கோவில் அருகே மேலசூரங்குடி பகுதியை சேர்ந்தவர் சிவசாமி. இவர் மாநகர் மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவராக உள்ளார். இவரது மகன் அபினேஷ் (29). அபினேஷ் மனைவி சிவரஞ்சனிக்கு கடந்த சில வாரங்களுக்கு முன்பு குழந்தை பிறந்தது.
சம்பவ தினம் கீரிவிளை என்ற இடத்தில் உள்ள பெற்றோர் வீட்டில் இருந்த அவரது மனைவி, குழந்தையை பார்க்க அபினேஷ் சென்றுள்ளார். மனைவி குழந்தையை பார்த்துவிட்டு வீட்டிற்கு பைக்கில் வந்து கொண்டிருந்தபோது, ஈத்தாமொழி அருகே பொட்டல் சந்திப்பு பகுதியில் வைத்து அந்த வழியாக வந்த மற்றொரு பைக் அபினேஷ் ஒட்டிய பைக் மீது மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்ட அபினேஷ் படுகாயம் அடைந்தார். அவரை உடனே அக்கம் பக்கத்தினர் மீட்டு நாகர்கோவில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி இன்று அபினேஷ் உயிரிழந்தார். ஈத்தாமொழி போலீசார் பிரேத பரிசோதனைக்காக குமரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். காங்கிரஸ் பிரமுகர் மகனின் மரணத்தால் இன்று மாவட்ட காங்கிரஸ் சார்பில் நடைபெற இருந்த ஆர்ப்பாட்டம் ரத்து செய்யப்பட்டதாக மாநகர் மாவட்ட காங்கிரஸ் அறிவித்துள்ளது.


