திங்கள்சந்தை, மார்ச் 16 –
இரணியல் அருகே மொட்டவிளை என்ற பகுதியை சேர்ந்தவர் தர்மலிங்கம் (51). கொத்தனார் வேலை செய்து வந்தார். இவரது மனைவி ரத்தினபாய். இவர்களுக்கு ஒரு மகன் உண்டு. கடந்த சில ஆண்டுகளாக கணவன் மனைவி கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தர்மலிங்கம் ஜன்னல் வழியாக பக்கத்து வீட்டுப் பெண் குளிப்பதை எட்டிப் பார்த்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டு, சிறைக்கு சென்றார். பின்னர் ஜாமீனில் வழியே வந்தவர் யாரிடமும் சரிவர பேசாமல் இருந்ததாக தெரிகிறது.
அதை தொடர்ந்து இன்று அவரது வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது. அக்கம் பக்கத்தினர் சென்று பார்த்தபோது அவர் தூக்கில் பிணமாக தொங்கிய நிலையில் காணப்பட்டார். இறந்து 3 நாட்கள் வரை ஆகி இருக்கலாம் என்று தெரிகிறது. இது குறித்து இரணியல் போலீஸ் நிலையத்தில் அவரது மனைவி ரெத்தின பாய் புகார் செய்தார்.
புகாரில் கணவர் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறியுள்ளார். அதன் பேரில் இரணியர் போலீசார் உடலை கைப்பற்றி குமரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


