நாகர்கோவில், ஜூன் 16 –
ஆரல்வாய்மொழி கூட்டுறவு வங்கியில் கடந்த 2017 முதல் 2024 ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் போலி தங்க நகைகளை அடகு வைத்து சுமார் 2 கோடி 65 லட்ச ரூபாய் வரை மோசடி செய்யப்பட்டது கூட்டுறவுத் துறை தணிக்கையில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த மோசடி குறித்து கூட்டுறவு சங்கங்களின் துணைப் பதிவாளர் முருகேசன் நாகர்கோவில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். அவரது புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர்.
பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையின் அடிப்படையில் இந்த மோசடியில் தொடர்புடைய கூட்டுறவு வங்கியின் பணியாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் உள்ளிட்டோர் 7 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் வங்கியின் எழுத்தாளரான முத்துகிருஷ்ணன் என்பவரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் இன்று கைது செய்தனர். அவரிடத்தில் ரகசிய இடத்தில் வைத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் 6 பேரை தனிப்படை அமைத்து போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
இதற்கு இடையில் இந்த மோசடியில் வேறு சில ஊழியர்களுக்கும் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், கூட்டுறவு வங்கியில் மேலும் சில ஊழியர்களை பிடித்து பொருளாதார குற்றவியல் போலீசார் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்துள்ளனர். கூட்டுறவு வங்கியில் நகை கடன் மோசடி நடந்துள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையேயும், கூட்டுறவு சங்க வட்டாரத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


