மார்த்தாண்டம், ஜூன் 12 –
அருமனை அருகே ஒருநூறாம்வயல், வண்ணாத்தி பாறை பகுதிகளில் அதிக அளவில் மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர். மலைப்பகுதியை ஒட்டி இந்த கிராமங்கள் அமைந்துள்ளதால் அவ்வப்போது மலையிலிருந்து வெளியேறும் காட்டு யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் ஊருக்குள் வருவது வாடிக்கையாக இருந்து வருகிறது.
இந்த நிலையில் வனத்தில் இருந்து வெளியே வந்த யானைகள் கடந்த சில நாட்களாக வண்ணாத்தி பாறை கிராமத்துக்குள் புகுந்து விளைநிலங்களை நாசம் செய்து வருகின்றன. இதன்படி நேற்று இரவு வண்ணாத்திப் பாறை பகுதிக்கு வந்த 4 காட்டு யானைகள் பழங்குடி மக்கள் குடியிருப்பு பகுதியில் முகாமிட்டன.
இதனால் அதிர்ச்சி அடைந்த மக்கள் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர் மேளம் அடித்தும், பட்டாசு வெடித்தும் குடியிருப்பு பகுதியில் புகுந்த யானைகளை வனப் பகுதிக்குள் விரட்டினர். எனினும் அந்த யானைகள் கிராமத்தில் நின்ற மரங்களை ஒடித்தும், பயிர்களை தின்று சேதப்படுத்திவிட்டு சென்றதாக கிராம மக்கள் கூறினர்.
மேலும் தற்போது இந்த யானை கூட்டங்கள் மேல் பகுதியில் நிற்பதாக கூறினர். இதனால் எந்த நேரத்திலும் யானைகள் மீண்டும் குடியிருப்பு பகுதியை நோக்கி படையெடுக்க வாய்ப்பு உள்ளதால், பழங்குடி மக்களுக்கு வனத்துறையினர் உரிய பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


