திண்டுக்கல், செப்.08.
திண்டுக்கல் மாவட்டம், சித்தையன்கோட்டை தேர்வுநிலை பேரூராட்சியில் தமிழ்நாடு செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் தமிழக அரசின் பல்வேறு மக்கள் நலத்திட்டங்கள் மற்றும் சாதனைகளை விளக்கும் புகைப்படக் கண்காட்சி நடைபெற்றது.
பொதுமக்கள் அரசின் திட்டங்களை எளிதில் அறிந்து கொண்டு பயன்பெறும் வகையில் மாவட்டம் முழுவதும் தொடர்ந்து நடத்தப்பட்டு வரும் இந்தக் கண்காட்சியில், 200 யூனிட் இலவச மின்சாரத் திட்டம், விவசாயக் கடன் தள்ளுபடித் திட்டம், சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படைத் திட்டம், போதைப்பொருட்கள் தடுப்புப் படைத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் குறித்த புகைப்படங்கள் இடம்பெற்றிருந்தன.
மேலும், திண்டுக்கல் மாவட்ட பொறுப்பு மற்றும் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர், மாவட்ட ஆட்சித்தலைவர் ஆகியோரின் பங்கேற்பில் நடைபெற்ற மாவட்ட வளர்ச்சித் திட்டப் பணிகள், ஆய்வுக் கூட்டங்கள் உள்ளிட்ட நிகழ்வுகளின் புகைப்படங்களும் கண்காட்சியில் இடம்பெற்றிருந்தன.
புகைப்படங்கள் மூலம் அரசின் திட்டங்கள் மற்றும் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சிப் பணிகளை பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் கண்காட்சி அமைக்கப்பட்டிருந்தது. இதனை பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்வையிட்டனர்.



