விளாத்திகுளம், ஜூலை 18 –
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள மீனாட்சிபுரம் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ காளியம்மன் கோவில் ஆனி மாத கொடை விழாவை முன்னிட்டு மாபெரும் இரட்டை மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது.
சின்னமாடு, பூஞ்சிட்டு என இரு பிரிவுகளாக நடைபெற்ற இந்த போட்டியில் ராமநாதபுரம், விருதுநகர், மதுரை, சிவகங்கை, திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 52 ஜோடி மாடுகள் போட்டியில் கலந்து கொண்டு சீறிப்பாய்ந்தன. சின்னமாட்டு பந்தயத்திற்கு போக வர 6 மைல் தூரமும், பூஞ்சிட்டு போட்டிக்கு போக வர 5 மைல் தூரமும் போட்டியானது நிர்ணயிக்கப்பட்டு, மீனாட்சிபுரம் முதல் குளத்தூர் சாலையில் நடைபெற்றது.
போட்டியில் வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளர் மற்றும் ஓட்டி வந்த சாரதிகளுக்கு விழா கமிட்டியின் சார்பாக பரிசுத்தொகை மற்றும் குத்துவிளக்கு பரிசாக வழங்கி கௌரவிக்கப்பட்டது. வெற்றி இலக்கை நோக்கி சீறிப்பாய்ந்த காளைகளை சாலையின் இரு புறமும் நின்று பொதுமக்கள் மற்றும் பந்தய ரசிகர்கள் ஆர்வமுடன் கண்டு ரசித்தனர்.
நடைபெற்ற மாபெரும் மாட்டு வண்டி எல்கை பந்தயத்தினை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர், தலைமை செயற்குழு உறுப்பினர் மார்க்கண்டேயன் கொடியசைத்து துவக்கி வைத்தார். நிகழ்வில் விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்னமாரிமுத்து, விளாத்திகுளம் தெற்கு ஒன்றிய செயலாளர் இம்மானுவேல்,புதூர் பேரூர் கழக பொறுப்பாளர் வெற்றிவேலன், கழக நிர்வாகிகள், கிராம பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.



