ஈரோடு, செப்.02.
ஈரோடு மாவட்டத்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், தமிழகத்தில் விசைத்தறி தொழிலை பாதுகாக்கவும், நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்யவும் தமிழக அரசுக்கு பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் 1.68 லட்சத்திற்கும் மேற்பட்ட விசைத்தறிக் கூடங்களில் 5 லட்சத்திற்கும் அதிகமான விசைத்தறிகள் இயங்கி வருவதுடன், இதனை நம்பி நேரடியாகவும் மறைமுகமாகவும் சுமார் 20 லட்சம் தொழிலாளர்கள் வாழ்வாதாரம் பெற்று வருவதாக கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
சட்டப்பேரவையில் கைத்தறித்துறை மானியக் கோரிக்கை நடைபெற்றபோது, டேரிப் 3 ஏ 2 பிரிவின் கீழ் இயங்கும் விசைத்தறிக்கூடங்களுக்கு வழங்கப்படும் 1,000 அலகு இலவச மின்சாரத்தை 1,500 அலகாக உயர்த்தும் அறிவிப்பு வெளியாகும் என விசைத்தறியாளர்கள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால், இதுகுறித்து எந்த அறிவிப்பும் வெளியாகாததால் ஏமாற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இலவச வேட்டி–சேலை திட்டத்திற்காக புதிய வடிவமைப்புகளில் ஆடைகளை உற்பத்தி செய்வதால் ஒரு விசைத்தறிக்கு ரூ.5,000 வரை கூடுதல் செலவு ஏற்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது. வேட்டி உற்பத்தி அளவு 3.75 மீட்டரில் இருந்து 2 மீட்டராக குறைக்கப்பட்டுள்ளதால் உற்பத்தி நடைமுறையில் கூடுதல் சிரமங்கள் ஏற்படுவதுடன், உற்பத்தியும் பாதிக்கப்படுவதாக கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டு ஜரிகை பார்டருடன் கூடிய சேலைகள் உற்பத்தி செய்யப்படுவதால், வேட்டி மற்றும் சேலை உற்பத்திக்கான கூலியை உயர்த்தி வழங்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாகவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. கூலி உயர்வு குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்த்திருந்த நெசவாளர்களுக்கு மீண்டும் ஏமாற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் தொழிலும் வாழ்வாதாரமும் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளதாகவும் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
எனவே, ஆட்சிப் பொறுப்பேற்றதும் 1,000 அலகு இலவச மின்சாரத்தை 1,500 அலகாக உயர்த்துவோம் என அளித்த தேர்தல் வாக்குறுதியை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்றும், இலவச வேட்டி–சேலை திட்டத்திற்கான உற்பத்திக் கூலியை உயர்த்தி அறிவிக்க வேண்டும் என்றும் தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பு தமிழக அரசை வலியுறுத்தியுள்ளது. விசைத்தறி தொழிலை பாதுகாப்பதன் மூலம் லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.



