நாகர்கோவில், மார்ச் 25 –
நாகர்கோவில் மாநகர பகுதியில் உள்ள வீடுகளுக்கு முக்கடல் அணையில் இருந்து மட்டும் தண்ணீர் கொண்டு வரப்பட்டு விநியோகம் செய்யப்பட்டது. மாநகர பகுதி மக்களின் குடிநீர் தேவைகள் அதிகரிப்பால், தமிழக அரசு புத்தன் அணை குடிநீர் திட்டத்தை செயல்படுத்தியது.
தற்போது வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் முக்கடல் அணையில் தண்ணீர் வேகமாக குறைந்து வருகிறது. தற்போது 1 அடியில் தண்ணீர் இருப்பதால், முக்கடல் அணையில் இருந்து தினமும் குறைந்த அளவே தண்ணீர் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மாநகராட்சி ஆணையர் நிஷாந்த் கிருஷ்ணா உத்தரவின் பேரில் மாநகராட்சி அதிகாரிகள் புத்தன் அணைக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.
இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், முக்கடல் அணையில் தற்போது 1 அடியில் தண்ணீர் கிடக்கிறது. 1 அடியின் கீழ் 20 அடி தண்ணீர் மேலும் உள்ளது. இந்த தண்ணீர் மைனஸ் 20ல் இருந்து கீழே செல்லும். தண்ணீர் குறைய குறைய அழுத்தம் குறைவாக இருக்கும்.
தற்போதுள்ள நிலையில் இன்னும் 25 நாட்கள் வரை முக்கடல் அணையில் இருந்து தண்ணீர் எடுக்கலாம். மேலும் பெருஞ்சாணி அணையில் இருந்து மே 30ம் தேதி வரை தண்ணீர் கிடைக்கும். அதனை தொடர்ந்து ஜூன் மாதம் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கும்போது, நாகர்கோவில் மாநகராட்சி பகுதிக்கு தேவையான குடிநீர் கிடைக்கும் என்றனர்.



