மதுரை, ஆகஸ்ட் 14 –
மதுரை கோட்டத்தில் 25 ரயில் நிலையங்களில் பயண சீட்டுகள் விற்பனை செய்ய முகவர்கள் நியமிக்கப்பட இருக்கின்றனர். அதன்படி மதுரை மாவட்டத்தில் கூடல் நகர், சமயநல்லூர், வாடிப்பட்டி, திண்டுக்கல் மாவட்டத்தில் வடமதுரை, தாமரைப்பாடி, அய்யலூர், திருச்சி மாவட்டத்தில் குமாரமங்கலம், கல்பட்டி சத்திரம், வையம்பட்டி, கொளத்தூர், பூங்குடி, புதுக்கோட்டை மாவட்டத்தில் புதுக்கோட்டை, திருமயம், கீரனூர், வெள்ளனூர், சிவகங்கை மாவட்டத்தில் சிவகங்கை, பனங்குடி, மேலக்கொன்ன குளம், செட்டிநாடு, கல்லல், ராமநாதபுரம் மாவட்டத்தில் சூடியூர், விருதுநகர் மாவட்டத்தில் கள்ளிக்குடி, துலுக்கபட்டி, திருநெல்வேலி மாவட்டத்தில் கங்கை கொண்டான், தாழையூத்து ஆகிய ரயில் நிலையங்களில் பயணச்சீட்டு முகவர்கள் நியமிக்கப்பட இருக்கின்றனர்.
மேலும் குறிப்பாக ரயில் நிலையங்கள் சார்ந்த மாவட்டங்களில் உள்ள இளைஞர்கள் மட்டுமே முகவர் பணிக்கு விண்ணப்பிக்க முடியும். இதற்கான விண்ணப்ப கட்டணம் ரூபாய் 1,120 செலுத்த வேண்டும். இதனுடன் விண்ணப்பிக்கும் ரயில் நிலையங்களுக்கு ஏற்ப ரூபாய் 2000 அல்லது 5000 காப்புத்தொகையும் செலுத்த வேண்டும். தேர்ந்தெடுக்கப்படும் முகவர்கள் ரயில் நிலையங்களில் முன்பதிவு இல்லாத பயண சீட்டுகள், சீசன் டிக்கெட்டுகள் ஆகியவற்றை விற்பனை செய்யலாம். மேலும் கட்டணச் சலுகை பயண சீட்டுக்களை அந்தந்த ரயில் நிலைய மேலாளர் அனுமதியுடனும் வழங்கலாம்.
முகவராக விண்ணப்பிக்கும் நபருக்கு 18 வயது நிறைவடைந்திருக்க வேண்டும். ரூபாய் 20000 வரையிலான பயணச்சீட்டு விற்பனைக்கு 25 சதவீத கமிஷனும், ரூபாய் ஒரு லட்சம் வரையிலான பயணச்சீட்டு விற்பனைக்கு 15 சதவீத கமிஷனும், ரூபாய் ஒரு லட்சத்திற்கு மேலான பயண சீட்டு விற்பனைக்கு 4 சதவீதம் அல்லது முகவர் குறிப்பிட்ட சதவீத கமிஷனாக வழங்கப்படும். விண்ணப்பங்களை ஆகஸ்ட் 25 மாலை 3 மணிக்கு முன்னதாக இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். எனவும் மேலும் விவரங்களுக்கு https://sr.indianrailways.gov.in/ என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


