ஈரோடு, டிச. 4 –
ஈரோடு மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில வாணிப கழக (டாஸ்மாக்) சில்லறை விற்பனை கடைகள் மொத்தம் 182 கடைகள் இயங்கி வருகின்றது. மலைப்பகுதியில் இயங்கி வரும் 3 கடைகளில் விற்பனை செய்யப்படும் மதுபானங்களை வாடிக்கையாளர்கள் அருந்திய பின் காலி மதுபான புட்டிகளை அதே கடைகளில் திரும்ப பெற்றுக்கொள்ளும் திட்டம் ஏற்கனவே நடைமுறைப்படுத்தப்பட்டு தற்போது அமலில் உள்ளது.
இப்போது சென்னை உயர்நீதிமன்ற ஆணையின்படி மீதமுள்ள 179 கடைகளுக்கு காலி மதுபான புட்டிகளை திரும்ப பெறும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது. எனவே இனி மேல் அனைத்து வகை மதுபானங்கள் மற்றும் பீர் வகைகளுக்கு சில்லறை விற்பனைக் கடைகளில் விற்பனை செய்யும் போது அதிகபட்ச விற்பனை விலையுடன் சேர்த்து 10 ரூபாய் கூடுதலாக பெறப்படும். இதற்கான கடை எண் குறிப்பிட்டு EC Rs.10 என அச்சிட்ட ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருக்கும்.
மேற்படி மதுபானங்களின் காலி புட்டிகளை ஏற்கனவே வாங்கிய கடைகளில் ஸ்டிக்கரோடு திருப்பி ஒப்படைக்கும் போது வாடிக்கையாளர்களுக்கு ரூ.10 திரும்ப வழங்கப்படும்.
எனவே வாடிக்கையாளர்கள் இனி வருங்காலங்களில் காலி மதுபான பாட்டில்களை நீர் நிலைகள் மற்றும் பொது வெளியில் தூக்கி வீசாமலும், உடைக்காமலும் சம்மந்தப்பட்ட மதுபான கடைகளில் திரும்ப ஒப்படைத்து ரூ.10 திரும்ப பெற்றுக்கொள்ளுமாறு கேட்டு கொள்ளப் படுகிறார்கள்.
இத்தகவலை ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.


