தஞ்சாவூர், ஜூன் 1 –
மேகதாது பகுதியில் அணைக் கட்டும் முயற்சியை கண்டித்து முற்றுகை போராட்டம் நடத்துவதற்காக தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தினர் பி.ஆர்.பாண்டியன் தலைமையில் தஞ்சாவூரில் இருந்து 20க்கும் மேற்பட்ட வாகனங்களில் புறப்பட்டு சென்றனர்.
காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது பகுதியில் கர்நாடக அரசு அணைக்கட்டி அங்கு உள்ள நீரை தங்களது மாநில பாசன தேவைகளுக்காக பயன்படுத்த திட்டமிட்டுள்ளது. இதனால் தமிழகத்திற்கு வரவேண்டிய காவிரி நீர் பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாக விவசாயிகள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
இந்த நிலையில் மேகதாது பகுதியில் அணைக்கட்டும் திட்டத்தை கைவிட வேண்டும், சுப்ரீம் கோர்ட் தீர்ப்பின்படி தமிழகத்திற்கு வழங்க வேண்டிய மாதாந்திர நீர் பங்கீடு கர்நாடக அரசு முறையாக வழங்க வேண்டும், மேலும் இரு மாநில விவசாயிகளின் நலன் கருதி கருத்தில் கொண்டு ராசி மணல் பகுதியில் அணை கட்ட அனுமதி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மேகதாது பகுதியில் முற்றுகையிட்டு போராட்டம் நடத்த தமிழக காவிரி விவசாய சங்கங்கள் முடிவு செய்தது.
அதன்படி தமிழக விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் பி.ஆர்.பாண்டியன் தலைமையில் தஞ்சாவூர் பெரிய கோவில் முன்பு அமைந்துள்ள மாமன்னன் ராஜராஜசோழன் சிலைக்கு மாலை அணிவித்து அங்கிருந்து வாகன பேரணி தொடங்கியது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.
இப்பேரணியில் தலைவர் திருப்பதி, துணைத்தலைவர் கிருஷ்ண மணி, துணை செயலாளர் சுவாமிநாதன் மற்றும் மாவட்ட தலைவர்கள், செயலாளர்கள் என மொத்தம் 20க்கும் மேற்பட்ட வாகனங்களில் புறப்பட்டு சென்றனர். திருச்சி நாமக்கல் சேலம் தர்மபுரி வழியாக ஓசூர் சென்று அங்கிருந்து மேகதாது பதவிக்கு முற்றுகை போராட்டம் நடத்த உள்ளனர்.
முன்னதாக பேரணியை தொடங்கும் போது பி.ஆர்.பாண்டியன் நிருபர்களிடம் கூறியதாவது:
காவிரி நடுவர் மன்றத்தின் இறுதி தீர்ப்பில் கீழ் பாசன விவசாயிகளை பாதிக்கும் வகையில், கர்நாடக அரசு புதிய அணைகளை கட்டக்கூடாது என்று தெளிவாக கூறப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பை சுப்ரீம் கோர்ட் உறுதி செய்துள்ளது. இந்த சூழலில் மேகதாது அணை திட்டத்திற்கான பணிகளை விரைவுபடுத்தி பூமி பூஜை நடத்த உள்ளதாக கர்நாடக துணை முதல் மந்திரி சிவக்குமார் அறிவித்திருப்பது சட்டவிரோதமானது. இது நீதிமன்ற அவமதிப்புக்கு உரிய செயலாகும்.
எனவே தமிழக அரசு இது தொடர்பாக உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். மேகதாது அணை திட்டத்தை கைவிட வேண்டும். அதே நேரத்தில் ராசி மணல் பகுதியில் தமிழக அணைக்கட்ட அனுமதி வழங்க வேண்டும். அங்கு அணை கட்டப்பட்டால் இரு மாநில விவசாயிகளுக்கும் பயன் அளிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.



