கோவை, மே 21 –
கோவை மாவட்டம் கூடலூர் நகராட்சிக்குட்பட்ட பகுதியில் பொதுமக்களின் நீண்ட நாள் போக்குவரத்து தேவையை பூர்த்தி செய்யும் வகையில், புதிய மினிபஸ் (சிற்றுந்து) சேவை இன்று அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைக்கப்பட்டது.
கென்னடி குடும்பத்தாரின் சார்பில், பெரியநாயக்கன்பாளையம் முதல் கோவனூர் வரை இயக்கப்படும் இந்த சிற்றுந்து சேவையை, கென்னடி தென்றல் அவென்யூ பகுதியில் நகர் மன்ற தலைவர் அ.அறிவரசு பொதுமக்களோடு இணைந்து கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்த புதிய பேருந்து வசதி, இப்பகுதி மக்களின் தினசரி பயணத்தை எளிதாக்குவதுடன், நகராட்சிக்குட்பட்ட கிராமப்புற இணைப்பையும் பலப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் துவக்க விழாவில் உள்ளூர் மக்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பலர் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் செல்வநம்பி, அண்ணாதுரை, இளைஞரணி உதயகுமார், நகர்மன்ற உறுப்பினர்கள் முருகானந்தம், நந்தினி, ஜல்லிமேடு புதூர் குணசேகரன், ஆர்.வி.நகர் ரமேஷ், முன்னாள் கவுன்சிலர் சீனிவாசன், ஐயப்பன், ஞானம், சிடிசி முருகன், மருதாச்சலம் உள்ளிட்ட பலர் முன்னிலை வகித்தனர். கூடலூர் நகராட்சிப் பகுதியில் போக்குவரத்து வசதிகள் குறைவாக இருந்த இடங்களை இணைக்கும் வகையில் கொண்டு வரப்பட்டுள்ள இந்த மினிபஸ் சேவை, பொதுமக்களுக்கு பெரும் பயனளிக்கும் என விழாவில் பங்கேற்றவர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.



