தருமபுரி, ஜூலை 24 –
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டம், பஞ்சப்பள்ளி அருகே உள்ள புதுப்பேட்டை பேருந்து நிறுத்தத்தில் அமைந்துள்ள நிழற்கூடம் பல ஆண்டுகளாக பராமரிப்பு இன்றி சிதிலமடைந்து காணப்படுவதால், பேருந்துக்காக காத்திருக்கும் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
குறிப்பாக, புகழ்பெற்ற ஏழுகுண்டு முனியப்பன் ஆலயத்திற்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்லும் நிலையில், அந்த வழித்தடத்தில் உள்ள இந்த பேருந்து நிறுத்த நிழற்கூடம் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. மேற்கூரை மற்றும் சுவர்கள் சேதமடைந்துள்ளதால், மாணவர்கள், பெண்கள், முதியோர் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பாக நின்று பேருந்துக்காக காத்திருக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
மேலும், இரவு நேரங்களில் இந்த நிழற்கூடம் மது அருந்துவோரின் கூடாரமாக மாறிவிட்டதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். காலி மதுபாட்டில்கள், குப்பைகள் மற்றும் சமூக விரோத செயல்களால் அந்த பகுதி சுகாதார சீர்கேட்டிற்கும், பாதுகாப்பு அச்சுறுத்தலுக்கும் உள்ளாகியுள்ளது. இதனால், ஆலயத்திற்கு வரும் பக்தர்களும், பொதுமக்களும் அச்சத்துடனே அந்த இடத்தை கடந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே, சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து, சிதிலமடைந்த நிழற்கூடத்தை அகற்றி புதிய நவீன நிழற்கூடம் அமைக்கவும், இரவு நேரங்களில் சமூக விரோத செயல்களைத் தடுக்க காவல் மற்றும் கண்காணிப்பை தீவிரப்படுத்தவும் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.



