திருச்சி, மே 28 –
தமிழகத்தில் கடந்த கால திமுக, அதிமுக ஆட்சிகளில் டாஸ்மாக் மதுக் கடைகளில், மது பாட்டிலில் குறிப்பிட்ட விலையைவிட கூடுதலாக ரூ.10 வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதே நேரம் புதிதாக கட்சி ஆரம்பித்த தவெக தலைவர் விஜய் பாட்டிலுக்கு 10 ரூபாய் என தேர்தல் பிரசாரத்தின் போது கரூரில் பாடியது பயங்கர வைரலானது. முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை நோக்கி விஜய் பாடிய அந்த பாடலை ‘செல்பி புள்ள’ பாட்டுடன் மிக்ஸிங் செய்து ஆட்டம் போட்டு கொண்டாடினர் தவெகவினர்.
தவெக ஆட்சியைப் பிடித்து விஜய் முதல்வராகி 15 நாட்களுக்கும் மேல் ஆகிவிட்டது. இன்னமும் டாஸ்மாக்கில் மதுபான பாட்டில்களுக்கு 10 ரூபாய் மட்டுமுள்ள அதற்கு அதிகமாகவே மதுப்பிரியர்களிடம் இருந்து வாங்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. டாஸ்மாக்கில் வாங்கப்படும் அந்த 10 ரூபாயை வெறும் ஊழல் என்று குறுகிய பார்வையில் மட்டும் கடந்துவிட முடியாது.
அது புதிதாக பொறுப்பேற்றுள்ள தவெக அரசு காலத்திலும் தொடர்வதால் மதுப்பிரியர்கள் கவலை தெரிவித்து இருந்தனர்.
இந்த நிலையில் மது பாட்டிலுக்கு கூடுதலாக பணம் வசூலித்தால் டாஸ்மாக் கடை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. இது வெற்று அறிவிப்பு என்பதை மது பிரியர்கள் உணர்ந்தனர். அதே நேரம் கூடுதலாக அனைத்து மதுபான கடைகளிலும் ரூ.10, 20 என வசூலிக்கப்பட்டது தொடர்ந்தது என்றாலும், ஒவ்வொரு டாஸ்மாக் கடைக்கு பின்னாலும் பாட்டிலுக்கு பத்து ரூபா கணக்கு பெரிய கதையாகவும், காரணமாகவும் இருக்கிறது. இதில் தவெக, அதிமுக, திமுக கட்சி பேதம் இல்லை என்கின்றனர் டாஸ்மாக் ஊழியர்கள்.
நாங்கள் ஏன் மது பாட்டிலுக்கு ரூ.10 கூடுதலாக வசூலிக்கிறோம் என்று டாஸ்மாக் கடை ஊழியர் ஒருவர் வேதனையுடன் தெரிவிக்கிறார். கடந்த 2017 இல் நெடுஞ்சாலைகளில் உள்ள கடைகள் என 2300 கடைகளை தமிழக அரசு மூடியது. அந்த கடைகளை வேறு இடங்களில் திறக்க வேண்டி வரும்போது அதற்கான இடத்தை ஊழியர்களையே பிடித்து தருமாறு வாய்மொழி உத்தரவிட்டது டாஸ்மாக் நிர்வாகம். டாஸ்மாக்குக்கு இடம் கொடுக்க யாரும் முன்வரமாட்டார்கள். அப்படி கொடுக்க தயாராக இருப்போரும் அதிகப்படியான வாடகையையே கோருவர்.
அரசு ஒரு கடையின் இருப்பிடத்தை பொறுத்து 3000 முதல் 8000 ரூபாய் வரை மட்டுமே வாடகை கட்டணமாக ஒதுக்குகிறது. இதற்கு மேல் ஆகும் வாடகை செலவையும் கடையை நடத்தும் ஊழியர்களே ஏற்க வேண்டும். கடைக்கான கரண்ட் பில்லுக்கும் இதே கதைதான். குறிப்பிட்ட தொகையை மட்டுமே அரசு வழங்கும். எஞ்சிய தொகையை கடையை நடத்துவோரே பொறுப்பேற்க வேண்டும். நாள் ஒன்றுக்கு ரூ.3 லட்சம் மது விற்பனை நடைபெறும் டாஸ்மாக் கடையின் செலவுகள் என்னென்ன என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
அதாவது, காலி பாட்டில்களை சேகரிக்க வருபவருக்கு ரூ.800, மது பாட்டிலில் ஸ்டிக்கர் ஒட்ட வருபவருக்கு ரூ.800, காலிபாட்டில ரூபாய் தாள் கமிஷன் 10 சதவீதப்படி, ரூ.2,500, மதுக்கூட வாடகை ஒப்பந்ததாரருக்கு ரூ.1,000, மதுபான பாட்டில் உடைந்து போவதற்கு ரூ.1000, மின் கட்டணம் (டாஸ்மாக் நிர்வாகம் வழங்குவதை தவிர்த்து) ரூ.200, அலுவலகம் சென்று வருவதற்கு ரூ.200, வங்கியில் பணம் கட்ட செல்லும் செலவு ரூ.200, இன்டர்நெட் வசதி பெற ரூ.200, சுகாதார செலவுக்கு ரூ.200, பாதுகாப்பு செலவு ரூ.500, மதுபானங்கள் இனாம் செலவு ரூ.500, தண்ணீர் கேன் செலவு ரூ.60 என மொத்தம் ரூ.8160 செலவு ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை ஒரு மாதத்திற்கு கணக்கிடும்போது ரூ.2 லட்சத்து 44 ஆயிரத்து 800 செலவு ஏற்படுகிறது.
அதேபோல், மாதா மாதம் கையூட்டு செலவு விவரமும் அடுத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில், மாவட்ட மேலாளருக்கு ரூ.10 ஆயிரம், உதவி மேலாளருக்கு ரூ.2 ஆயிரம், அலுவலக பணியாளர்களுக்கு (எண்ணிக்கைக்கு ஏற்ப) ரூ.10 ஆயிரம், கலால் (வருவாய் ஆய்வாளர், துணை கமிஷனர்) ரூ.5 ஆயிரம், கலால் (உதவி கமிஷனர்) ரூ.5 ஆயிரம், கட்டிட உரிமையாளருக்கு வாடகை ரூ.60 ஆயிரம், மதுபானம் இறக்கு கூலி (பெட்டி ஒன்றுக்கு ரூ.5 வீதம்) ரூ.15 ஆயிரம், முதுநிலை மண்டல மேலாளர் ரூ.5 ஆயிரம், அரசியல் நன்கொடை ரூ.5 ஆயிரம், காலி பாட்டில் ஒப்பந்ததாரர் ரூ.3 ஆயிரம், மீடியா ரூ.3 ஆயிரம், இதர செலவுகள் ரூ.10 ஆயிரம் என ரூ.1 லட்சத்து 33 ஆயிரம் செலவு ஏற்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தத்தில், நாள் ஒன்றுக்கு ரூ.3 லட்சத்திற்கு மது விற்பனையாகும் ஒரு டாஸ்மாக் கடையில், மாதச் செலவு ரூ.3 லட்சத்து 77 ஆயிரத்து 800 ஏற்படுவதாக தெரிகிறது. இந்த இதரச் செலவுகளை சமாளிக்கவே பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலாக வசூலிக்கப்படுகிறது எனச் சொல்லும் டாஸ்மாக் ஊழியர்களின் கருத்து நியாயமான வாதமாகவே கருதப்படுகிறது.
டாஸ்மாக் ஊழியர்களுக்கு கூடுதல் வேலைப்பளுவை கொடுத்து, காலி பாட்டில்களில் ஒரு ஸ்டிக்கரை ஒட்டி விற்பனை செய்ய வேண்டும். திரும்பக் கொடுக்கப்படும் காலி பாட்டில்களை பத்திரமாக பாதுகாத்து வைத்து ஒப்பந்தத்தாரரிடம் மீண்டும் ஒப்படைக்க வேண்டும். இந்தப் பணியை செய்ய கூடுதலாக தேவைப்படும் வேலையாளுக்கும் இடத்துக்கும் கடையின் ஊழியர்களே பொறுப்பு. இத்தனை விவகாரங்களுக்கும் சேர்த்துதான் அந்த 10 ரூபாயை கூடுதலாக வாங்குகிறோம்.
நாங்கள் வாங்கும் 10 ரூபாயில் எங்கள் கையில் 1 ரூபாய் நின்றால் அதிசயம். ஆனால், மக்கள் 9 ரூபாய் கொள்ளைக்கு காரணமாக இருக்கும் தமிழக அரசு நிர்வாகத்தையும், ஆட்சி பீடத்தில் இருப்பவர்களையும் கண்டுகொள்ளாமல் அத்தனை பழியையும் ஊழியர்கள் மீதுதான் போடுகின்றனர்.
இதரச் செலவுகளை அரசு ஏற்றுவிட்டு, மற்ற துறைகளை போல எங்களின் அனுபவத்துக்கு ஏற்ற நியாயமான சம்பளத்தை அரசு கொடுத்தால் நாங்கள் கூடுதலாக 10 ரூபாய் கேட்க வேண்டிய தேவையே இருக்காது. ஆனால், கமிஷன் வாங்கி பழகிய அதிகாரிகள் அதை நடக்கவிடுவார்களா? ஆட்சி மாற்றம் நடந்தாலும் காட்சிகள் எதுவும் மாறவில்லை, வழக்கம்போல்தான் அதிகாரிகள் கமிஷன் கரப்ஷன். ‘பாட்டிலுக்கு 10 ரூபாய்…’ என ராகமாக பாட்டுப் பாடி ஓட்டு கேட்ட வித்தகர்கள் ஆட்சியிலும் அதே பத்து ரூபாய் பஞ்சாயத்து தொடரத்தான் செய்கிறது. அன்று செந்தில் பாலாஜிக்கு என்றார்கள் இன்று யாருக்கு செல்கிறது என்பதை ஆட்சியாளர்களே சொல்ல வேண்டும் மக்களிடத்தில் என்கின்றனர் வேதனையுடன்.
முன்னதாக, கடந்த சில நாட்களாகவே சேலம், ஈரோடு, திருப்பூர் என தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் டாஸ்மாக் ஊழியர்கள் காலி மது பாட்டில் திரும்பப் பெரும் திட்டத்திற்கு அதே ஊழியர்களை பயன்படுத்துவதற்கு எதிராக கடைகளை மூடி போராட்டம் நடத்தி வருகின்றனர். அந்த வகையில் திருச்சியிலும் நேற்று 156 கடைகள் அதிரடியாக அடைக்கப்பட்டது. இதனால் மனமகிழ் மன்றங்களில் வழக்கத்திற்கும் மாறான கூடுதல் தொகையுடன் மது பாட்டில்கள் விற்கப்பட்டது.
மதுப்பிரியர்கள் கொந்தளித்ததை அடுத்து காவல்துறையினர் திருச்சியில் உள்ள 10 மனமகிழ் மன்றங்களில் பாதுகாப்புக்காக நின்று மது பிரியர்களை வெளியேற்றி கடையை அரசு நிர்ணயித்த நேரத்தை காட்டிலும் அதாவது இரவு 11 மணிக்கு மூட வேண்டிய கடைகளை வெகு முன்னதாகவே 8 மணிக்கெல்லாம் மூடி பாதுகாப்பை பலப்படுத்தினர் மதுபாட்டில்களுக்கு என்றால் அது மிகையல்ல.



