நாகர்கோவில், மே 6 –
நாகர்கோவில் டென்னிசன் ரோடு பகுதியை சேர்ந்தவர் பெஞ்சமின் மகன் ஆஷிஸ் பெஞ்சமின் (38) ஜிம் பயிற்சியாளர். இவர் அதே பகுதியை சேர்ந்த எம் ஏ முதலாமாண்டு படித்து வரும் மாணவி ஒருவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. அவரை பலமுறை பெண்ணின் வீட்டிற்கு சென்று திருமணம் செய்ய கேட்டுள்ளார். ஆனால் பெண் வீட்டு தரப்பினர் இதற்கு சம்மதிக்கவில்லை.
இந்த நிலையில் சம்பவ தினம் அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்ற ஆஷிஸ் பெஞ்சமின் வீட்டிலிருந்த மாணவியின் பெற்றோரிடம் பெண் தர கேட்டு தகராறு செய்துள்ளார். அப்போது பெண்ணின் பெற்றோரை அவர் தரக்குறைவாக பேசி தாக்கியதுடன், வீட்டு கதவு, ஜன்னல் ஆகியவற்றை உடைத்து சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது. இது குறித்து அந்த பெண்ணின் தாயார் வடசேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
போலீசார் விசாரணை நடத்தி ஆஷிஸ் பெஞ்சமின் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த தாக்குதலில் காயம் அடைந்த பெண்ணின் தந்தை குமரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.


