நாகர்கோவில், ஜூலை 9 –
நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையத்திலிருந்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இன்று காலை நாகர்கோவில் இருந்து பிலாவிளை என்ற பகுதிக்கு செல்லும் அரசு டவுன் பஸ் நிறுத்தப்பட்டிருந்தது. அப்போது பஸ்சுக்குள் ஏறிய ஒருவர் திடீரென டிரைவரின் இருக்கையில் அமர்ந்து கொண்டு பஸ்சை இக்கினார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த டிரைவர் பஸ்சில் இருந்த அந்த நபரை கீழே இறங்குவதற்கு கூறினார். அந்த சமயம் வாலிபர் தான் வைத்திருந்த கற்களால் வீசிவிடுவேன் என மிரட்டினார்.
எனினும் சாதுர்யமாக செயல்பட்ட டிரைவர், கண்டக்டர் மற்றும் பொதுமக்கள் உதவியுடன் ஆசாமியை இருக்கையில் இருந்து எழுப்ப செய்தனர். ஆனால் அந்த நபர் பஸ்சுக்குள்ளேயே இருந்தார். இதையடுத்து டிரைவர் பஸ்சை கோட்டாறு காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றார். அங்கிருந்த போலீசார் பஸ்சில் இருந்த ஆசாமியை பஸ்ஸிலிருந்து இறக்கி, அவர் யார்? எதற்காக பஸ்சை இயக்க முயன்றார்? மனவலம் பாதித்தவரா? என விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அண்ணா பஸ் நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.



