மார்த்தாண்டம், மே 30 –
குமரி மாவட்டம் திற்பரப்பு அருகே உள்ள பகுதியை சேர்ந்த 72 வயதான முதியவர் ஒருவர் குலசேகரம் காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்தார். அந்த புகாரில் அவர் தனது வீட்டில் 46 கிராம் தங்க நகைகள் இருந்தன. அந்த நகையை கடந்த 28.5.2026 அன்று பீரோவை திறந்து பார்த்தபோது காணவில்லை. வீடு முழுவதும் தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என அந்த புகாரில் கூறியிருந்தார்.
இதன் பேரில் வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் வீட்டில் இருந்த முதியவரின் 3வது மகனை விசாரணைக்காக அழைத்தனர். அவர் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் காவல் நிலையத்திற்கு சென்றார். போலீஸ் நிலையத்தில் அவர்கள் மீது விஷ வாடை வீசியதும், போலீசார் விசாரித்த போது மூவரும் விஷம் குடித்ததாக கூறினார்.
இதை அடுத்து அவர்கள் வந்த ஆட்டோவில் அவர்களை ஏற்றி குலசேகரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மகன் மீது சந்தேகப்பட்டு விசாரணைக்கு அழைத்ததால் குடும்பத்துடன் மகன் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.


