நாகர்கோவில், ஜூலை 21 –
கன்னியாகுமரி மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று, உயர்கல்வியில் சேர விரும்பும் மாணவர்களுக்கு, தேவையான வழிகாட்டுதல் வழங்கிட மாவட்ட நிர்வாகம் மற்றும் பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் உயர்கல்வி வழிகாட்டி முகாம் நாகர்கோவிலில் உள்ள தனியார் கல்லூரி கலையரங்கில் இன்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சித்தலைவர் மு.பிரதாப் சிறப்புரையாற்றினார்.
அவர் தமது உரையில் மாணவ மாணவியர்களிடையே கூறியதாவது: இம்முகாமானது மாணவர்களைக் கட்டாயப்படுத்தி வந்து உட்கார வைக்க நடத்தப்படவில்லை. மாணவர்களாகிய நீங்கள் வாழ்வின் மிக முக்கியமான ஒரு கட்டத்தில் நீங்கள் இருக்கிறீர்கள். என்ன படிக்க வேண்டும் என்பதில் பலருக்குத் தெளிவு இருக்கலாம். சிலருக்குக் சந்தேகம் இருக்கலாம். அந்த சந்தேகங்களை நிவர்த்தி செய்வதற்கான ஒரு எளிய வழிகாட்டி நிகழ்ச்சி தான் இந்த நிகழ்ச்சி.
மாணவர்கள் தங்களுக்குப் பிடித்த படிப்பை தாங்களே சுயமாக தேர்ந்தெடுக்க வேண்டும்
பெண்கள் என்றால் செவிலியர் பாடப்பிரிவு மட்டும்தான் படிக்க வேண்டும், இந்த ஒரு குறிப்பிட்ட துறைக்கு மட்டும்தான் வேலை கிடைக்கும் என்ற தவறான எண்ணங்களை மாற்றி, எந்தத் துறையாக இருந்தாலும் அப்பாடப்பிரிவினை எதிர்கொண்டு, அத்துறையில் வேலைவாய்ப்பைப் பெற முடியும் என்ற நம்பிக்கை உங்கள் ஒவ்வொருவர்களிடம் ஆழ்மனதில் பதிய வைக்க வேண்டும். ஒவ்வொரு மாணவரும் நன்கு விழிப்புணர்வு பெற்றவர்களாகவும், தங்களுக்குப் பொருத்தமான சிறந்த கல்லூரியையும் படிப்பையும் தேர்ந்தெடுப்பவர்களாகவும் இருக்க வேண்டும் என பேசினார்.
நடைபெற்ற நிகழ்ச்சியில் உதவி ஆட்சியர் பயிற்சி ர.மோனிகா, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பிரின்ஸ் ஆரோக்கிய ராஜ், உதவி இயக்குநர் திறன்மேம்பாட்டு லட்சுமிகாந்தன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் செல்வராஜ், ஆசிரியர்கள், மாணவ மாணவியர்கள் உட்பட பலர் கலந்துகொண்டார்கள்.



