நாகர்கோவில், மே 09 –
நாகர்கோவில் மையப் பகுதியில் சிதம்பர நகரில் இயங்கி வரும் நியாயவிலைக் கடையை வேறு இடத்திற்கு மாற்றக் கூடாது என்று அகில இந்திய தமிழர் கழகம் கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக அகில இந்திய தமிழர் கழகத்தின் நிறுவனர் முத்துக்குமார் கூறியுள்ளதாவது: நாகர்கோவில் மாநகரின் மத்திய பகுதியும், பொது மக்கள் அடர்த்தியாக வசிக்கும் சிதம்பரநகர் பகுதியில் கடந்த 32 வருடங்களாக ஒரே இடத்தில் நியாய விலைக் கடை இயங்கி வருகின்றது. இது அப் பகுதியில் உள்ள மக்களுக்கு வசதியாகவே இருக்கிறது. இந்நிலையில் நியாய விலைக் கடையை கோட்டார் ஆயுர்வேத மருத்துவமனைக்கு அருகில் உள்ள கட்டிடத்திற்கு இடமாற்றம் செய்வதற்கான வேலைகள் நடைப்பெறுவதாக தெரிகிறது.
இந்த நியாய விலைக் கடையை சிதம்பரநகர் பகுதியில் இருந்து மாற்றக் கூடாது என்றும், இதனால் மக்கள் பல விதங்களில் பாதிக்கப் படுவார்கள் என்றும் சமுக சேவகரும், அகில இந்திய தமிழர் கழகத்தின் முக்கியஸ்தருமான ஜெபமணி என்பவர், கடந்த சில மாதங்களாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளை சந்தித்து முறையிட்டு வருகிறார். தற்போது நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ஆஸ்டினுக்கும் இது தொடர்பாக புகார் மனுவும் அனுப்பியுள்ளார்.
எம்எல்ஏ ஆஸ்டின் நாகர்கோவில் வந்ததும், இது குறித்து நேரில் சந்தித்து பொது மக்களின் சிரமங்களை எடுத்து கூறுவோம். பொது மக்களுக்கு சிரமம் ஏற்படாத வகையில் அருகில் உள்ள ஏதாவது கட்டிடத்திற்கு மாற்றுவதற்கான முயற்சியை எம்எல்ஏ ஆஸ்டின் மேற்கொள்ள வேண்டும். கோட்டார் ஆயுர்வேத மருத்துவமனைக்கு அருகில் நியாய விலைக் கடையை மாற்றக் கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.



