ராமநாதபுரம், ஜுலை 16 –
ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் என்னும் சிறப்பு திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சியர் மா.சிவகுரு பிரபாகரன் மனுக்களை பெற்று உடனடி நடவடிக்கை எடுக்கும் நிகழ்வு நடைபெற்றது. தொண்டியில் தமிழ்நாடு முஸ்லிம் மகளிர் பேரவை நிர்வாகிகள் கவுன்சிலர் சமீமா பானு தலைமையில் ஆலிமா செய்யது, சுல்தான் ஆலிமா, முத்து நாச்சியா, ஜுனைதா பானு, ஜென்னத்துல் பிர்தவுஸ் ஆகியோர் மனு அளித்தனர்.
தொண்டி பெண்கள் மேல்நிலை பள்ளி 1967-ல் தொடங்கப்பட்ட பள்ளியில் மாணவிகள் அதிக எண்ணிக்கையில் தொடர்ந்து படித்துக் கொண்டிருக்கின்றார்கள். மாவட்ட அளவில் சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவிகள் பயிலும் இப்பள்ளியில் போதிய வகுப்பறை கட்டிடங்கள் இல்லை. சுற்றுச் சுவர் மிகவும் தாழ்வாக இருக்கின்றன. அதனால் சிறுவர்கள் மதில் மேல் ஏறி பள்ளிக்குள் விளையாடக்கூடிய நிலை ஏற்படுகிறது. பெண் பிள்ளைகள் பாதுகாப்பு கருதி சுற்றுச்சுவர் உயர்த்தி கொடுக்க வேண்டும்.
இப்பள்ளியில் படிக்கும் மாணவிகள் தங்கும் விடுதிகளில் அதிக எண்ணிக்கையில் மாணவிகள் தங்க வசதி ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். போதிய ஆசிரியர்கள் உடனடியாக நியமனம் செய்ய வேண்டும். வாட்ச்மேன் ஒருவர் பணி அமர்த்த வேண்டும். மேலும் தொண்டி பத்தாவது வார்டில் மீரா சாகிப் தெருவில் போர்க்கால அடிப்படையில் மின் கம்பம் உடன் போடவேண்டும். மின் வயர்கள் தாழ்வாக இருக்கின்றதை சரி செய்து கொடுக்க வேண்டும். மேலும் தொண்டியில் அண்ணா நகர் பகுதியில் மின்வயர்கள் தாழ்வாக தொங்குகிறது. குடிநீர் சரிவர வருவதில்லை என்று மாவட்ட ஆட்சியரிடம் தமிழ்நாடு முஸ்லிம் மகளிர் பேரவை பெண்கள் மனு அளித்த உடன் உடனடியாக மாவட்ட ஆட்சித் தலைவர் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.



