தேனி,
தேனி மாவட்டம், காமயகவுண்டன்பட்டியைச் சேர்ந்த இராணுவ வீரர் லான்ஸ் நாயக் அ.மீனாட்சி சுந்தரம் பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளில் வெளிப்படுத்திய அசாத்திய வீர தீரச் செயலைப் பாராட்டி இந்திய அரசின் “கீர்த்தி சக்ரா” விருது பெற்றதைத்தொடர்ந்து, மாவட்ட ஆட்சித்தலைவர் இரா.வைத்திநாதன் இன்று (17.06.2026), இராணுவ வீரரின் இல்லத்திற்கு நேரில் சென்று, பொன்னாடை போர்த்தி பூங்கொத்து வழங்கி பாராட்டினார்.
இந்திய இராணுவத்தின் பீரங்கிப் படைப்பிரிவில் பணியாற்றிவரும் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த லான்ஸ் நாயக் அ.மீனாட்சி சுந்தரம் டிசம்பர் 19, 2024 அன்று ஜம்மு – காஷ்மீர் மாநிலத்திலுள்ள குல்காம் பகுதியில் நடைபெற்ற பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையின்போது, பயங்கரவாதிகளின் துப்பாக்கிச் சூட்டில் முகம் மற்றும் தோள்பட்டையில் பலத்த காயம் அடைந்த நிலையிலும், தனது கடமையிலிருந்து தவறாமல் தொடர்ந்து போராடி, பயங்கரவாதிகளை வீழ்த்தினார். அவரது அசாத்திய வீர தீரச் செயலைப் பாராட்டி இந்தியாவின் இரண்டாவது உயரிய அமைதிக்கால வீரவிருதான கீர்த்தி சக்ரா விருதினை மாண்புமிகு இந்தியக் குடியரசுத் தலைவர் அவர்கள் கடந்த 08.06.2026 அன்று புதுதில்லியில் நடைபெற்ற விழாவில் வழங்கிச் சிறப்பித்தார்.
அதனைத்தொடர்ந்து, தேசத்தின் பாதுகாப்பிற்காகத் தனது இன்னுயிரையும் பொருட்படுத்தாமல் அர்ப்பணிப்புடன் செயல்பட்ட இந்திய இராணுவ வீரர் லான்ஸ் நாயக் அ.மீனாட்சி சுந்தரம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தமிழ்நாடு அரசின் சார்பில் 48 இலட்சம் ரூபாய்க்கான காசோலையை 15.06.2026 அன்று வழங்கி தனது பாராட்டுகளைத் தெரிவித்தார்.
தேனி மாவட்டத்திற்கு பெருமை சேர்க்கும் வகையில் கீர்த்தி சக்ரா விருது பெற்ற காமயகவுண்டன்பட்டியைச் சேர்ந்த இராணுவ வீரர் லான்ஸ் நாயக் அ. மீனாட்சி சுந்தரம் இல்லத்திற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் சென்று பொன்னாடை போர்த்தி பூங்கொத்து வழங்கி பாராட்டுகளைத் தெரிவித்தார். இந்நிகழ்வில், வட்டாட்சியர் (உத்தமபாளையம்) பாலசண்முகம் உள்ளிட்ட அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.



