தூத்துக்குடி, ஏப். 11 –
தூத்துக்குடி மாவட்டத்தில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனையில் இதுவரை ரூ.78 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில், விசாரணைக்குப் பிறகு ரூ.72.18 லட்சம் ரொக்கத் தொகை மீண்டும் உரியவர்களிடமே ஒப்படைக்கப்பட்டுள்ளது.
தமிழகச் சட்டமன்ற பொதுத்தேர்தலை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டத்தில் தேர்தல் பறக்கும் படையினர் மற்றும் நிலையான கண்காணிப்புக் குழுவினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று வரை நடத்தப்பட்ட சோதனைகளில் கைப்பற்றப்பட்ட பணம் மற்றும் பொருட்களின் விவரங்களை மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான விஷு மகாஜன் வெளியிட்டுள்ளார்.
அதன்படி பறிமுதல் செய்யப்பட்ட விவரங்கள் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.78,07,266 ரொக்கம், வாக்காளர்களுக்கு விநியோகிக்கக் கொண்டு செல்லப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் ரூ.10,20,278 மதிப்பிலான இலவசப் பொருட்கள், தேர்தல் விதிமுறைகளை மீறி கொண்டு வரப்பட்ட ரூ.5,12,414 மதிப்பிலான மதுபானங்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
பின்பு ஆவணங்கள் மூலம் விடுவிக்கப்பட்டவை பறிமுதல் செய்யப்பட்ட தொகையில், உரிய ஆதாரங்களைச் சமர்ப்பித்த உரியவர்களிடம் களிடம் விசாரணைக்குப் பிறகு ரூ.72,18,146 ரொக்கத் தொகை மீண்டும் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால், உரிய ஆவணங்கள் இன்றி அதிகப்படியான ரொக்கப் பணத்தையோ, பொருட்களையோ கொண்டு செல்வதைத் தவிர்க்க வேண்டும் எனவும், கண்காணிப்புப் பணிகள் தொடர்ந்து தீவிரப்படுத்தப்படும் என மாவட்ட தேர்தல் அலுவலர் விஷு மகாஜன் தெரிவித்துள்ளார்.



