விருதுநகர், ஜூலை 18 –
ஒரு மாவட்டம் ஒரு தயாரிப்பு திட்டத்தின் கீழ் விருதுநகர் மாவட்டத்தில் சம்பா மிளகாய் மதிப்புக்கூட்டல் தொழில்துறைக்கு மத்திய அரசு ஊக்கமளிக்கிறது – மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்
மத்திய நிதி மற்றும் பெருநிறுவன விவகாரங்கள் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள திருச்சுழியில் உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தை (குளோபல் அக்ரோ சில்லி நிறுவனம்) தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் பேசிய மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், புவிசார் குறியீடு பெற்றுள்ள சம்பா, மிளகாய், வத்தல் உற்பத்தி மற்றும் மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்களை உற்பத்தி செய்யும் இந்த உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் மத்திய சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கியின் (சிட்பி) நிதியுதவியுடன் தொடங்கப்பட்டுள்ளது என்றார்.
இந்நிறுவனம் இப்பகுதி விவசாயிகளுக்கு கடன் வழங்குவதோடு நின்றுவிடாமல் அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்வது பாராட்டுக்குரியது என்றும், இது நாட்டிற்கே ஒரு முன்னுதாரமாத் திகழ்கிறது என்றும் கூறினார். இப்பகுதியில் விளைவிக்கப்படும் மிளகாயில் பூச்சிக்கொல்லியின் பயன்பாடு மிகவும் குறைவு என்பதால் இது ஏற்றுமதிக்கு மிகவும் உகந்தது என்று அவர் கூறினார்.
பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்குத் திட்டமான ஒரு மாவட்டம் – ஒரு தயாரிப்பு
திட்டத்தின் கீழ் இந்த மாவட்டத்தில் மிளகாய் விவசாயத்துக்கும் மதிப்புக் கூட்டலுக்கும்
தேவையான அனைத்து உதவிகளையும், சந்தைப்படுதலுக்கு தேவையான உதவிகளையும் அரசு செய்கிறது என்று அவர் தெரிவித்தார். விவசாயிகளுக்கு கடனுதவி வழங்குவதுடன் ஏற்றுமதி வாய்ப்புகள் உள்ளிட்ட அனைத்து உதவிகளையும் செய்கிறது என்று சிட்பி வங்கியின் அலுவலர்களை வெகுவாகப் பாராட்டினார்.
இந்நிகழ்ச்சிகளில், மாவட்ட ஆட்சியர் டாக்டர் என்.ஓ. சுகபுத்ரா, சட்டமன்ற உறுப்பினர் தங்கம் தென்னரசு, தொழில்முனைவோர், கல்லூரி மாணவர்கள், விவசாயிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.



