ஈரோடு, பிப். 6 –
பெருந்துறையில் அதிமுக ஆலோசனை கூட்டம் ஜெயக்குமார் எம்எல்ஏ தலைமையில் நடந்தது. கூட்டத்தில் பெருந்துறை ஒன்றியத்தில் உள்ள 29 கிராம ஊராட்சிகள், சென்னிமலை ஒன்றியத்தின் 6 ஊராட்சிகள் மற்றும் பெருந்துறை, கருமாண்டிசெல்லிபாளையம், காஞ்சிகோவில் உள்ளிட்ட 6 பேரூராட்சிகளின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்ய கொண்டு வரப்பட்ட கொடிவேரி கூட்டுக்குடிநீர் திட்டம் தற்போது நிர்வாகச் சீர்கேட்டால் முடங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.
கடந்த சில மாதங்களாக இத்திட்டத்தின் மூலம் வழங்கப்படும் குடிநீர் விநியோகம் சீரற்ற முறையில் உள்ளது. குறிப்பாக, பராமரிப்புப் பணிகளில் தொய்வு, பம்ப் ஆபரேட்டர்களுக்கு ஊதியம் வழங்கப்படாதது மற்றும் சிப்காட் கழிவுகளால் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்ட 35-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு மாற்று ஏற்பாடு செய்யாதது போன்ற காரணங்களால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
பல இடங்களில் பல வாரங்களாகக் குடிநீர் வராத சூழல் நிலவுகிறது திமுக அரசின் இந்தச் செயலற்ற நிர்வாகத்தைக் கண்டித்தும், பொதுமக்களின் அடிப்படைத் தேவையான குடிநீரைச் சீராக வழங்க வலியுறுத்தியும், பெருந்துறை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பும், ஊராட்சி வாரியாக தொடர் போராட்டமும் நடத்த அதிமுக சார்பில் முடிவு எடுக்கப்பட்டது. இக்கூட்டத்தில் அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.



