சென்னை: ஆக.28.
திமுகவின் கட்சி அமைப்பை மேலும் வலுப்படுத்தும் வகையில், தற்போதுள்ள 77 மாவட்டக் கழகங்களின் எண்ணிக்கையை 110 ஆக அதிகரித்து, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
திமுகவின் அமைப்பு ரீதியான நிர்வாகத்தை காலத்துக்கு ஏற்ப புதுப்பித்து, கட்சியின் செயல்பாடுகளை மேலும் மேம்படுத்தும் வகையில் இந்த மறுசீரமைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் 22-ஆம் தேதி நடைபெற்ற திமுக தலைமைச் செயற்குழுக் கூட்டத்தில், நிர்வாகச் சீரமைப்பு தொடர்பாக பல்வேறு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அதில் முக்கிய முடிவாக, தற்போதுள்ள 77 மாவட்டக் கழகங்களை 110 மாவட்டங்களாக அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டது. மேலும், தமிழகத்தில் உள்ள சட்டப்பேரவைத் தொகுதிகளை எந்தெந்த மாவட்டங்களில் இணைப்பது என்பது குறித்து முடிவெடுக்கும் அதிகாரம் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு வழங்கப்பட்டது.
இதையடுத்து, கழக மறுசீரமைப்புக் குழுவின் பரிந்துரைகள் மற்றும் கட்சி முன்னணியினருடன் நடத்தப்பட்ட ஆலோசனைகளின் அடிப்படையில், தமிழகத்தில் உள்ள தொகுதிகள் 110 கழக மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளன. அதிகமான மக்கள் தொகையை கருத்தில் கொண்டு சோழிங்கநல்லூர் சட்டப்பேரவைத் தொகுதி மட்டும் தனி மாவட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள 110 மாவட்டக் கழகங்களின் அடிப்படையில், நகர, ஒன்றிய, பகுதி, பேரூர், வட்டம் மற்றும் கிளை அமைப்புகளையும் மறுசீரமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான பரிந்துரைகளை மாவட்டக் கழகச் செயலாளர்கள், தலைமைக் கழகத்தால் அனுப்பப்படும் பிரதிநிதியின் முன்னிலையில் மாவட்டச் செயற்குழுவைக் கூட்டி 15 நாட்களுக்குள் வழங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
திமுக தொடங்கப்பட்ட நாள் முதல் இதுவரை 15 முறை கழக அமைப்புத் தேர்தல்கள் நடத்தப்பட்டு நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது 16-ஆவது கழக அமைப்புத் தேர்தலுக்கான பணிகளும் முன்னெடுக்கப்பட உள்ளன. இதன் ஒரு பகுதியாக மாவட்டக் கழகங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.



