தூத்துக்குடி, ஜூன் 30 –
தூத்துக்குடி மாநகராட்சியின் மாமன்ற கூட்டம் இன்று மாநகராட்சி கூட்ட அரங்கில் மேயர் என்.பி.ஜெகன் பெரியசாமி தலைமையில், ஆணையர் பிரியங்கா, துணை மேயர் ஜெனிட்டா ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் தீர்மானங்களை வாசிக்க தொடங்கிய போது, சமீபத்தில் அதிமுகவில் இருந்து தவெகவுக்கு தாவிய கவுன்சிலர் மந்திரமூர்த்தி, திமுகவில் இருந்து தவெகவுக்கு தாவிய கவுன்சிலர் ராமர் ஆகிய 2 பேரும் உட்காராமல், கழுத்தில் தவெக துண்டை அணிந்து கொண்டு கூட்டத்தின் முன் வரிசை இருக்கைகளுக்கு முன்பாக நின்று கொண்டிருந்தனர். அப்போது அவர்களை பார்த்து மேயர் ஜெகன் பெரியசாமி, “உங்களுக்கென பின் வரிசையில் இருக்கைகள் ஒதுக்கப்பட்டு இருக்கிறது. அதில் நீங்கள் உட்கார்ந்து கொள்ளுங்கள்” என்று கேட்டு கொண்டார்.
அதற்கு கவுன்சிலர் மந்திரமூர்த்தி, முன்பு வழக்கமாக அமரும் முன் வரிசையில் தன்னை உட்கார அனுமதிக்க வேண்டும்” என்றார். அதற்கு மேயர், “முன்பு அதிமுக மாநகராட்சி கொறடாவாக இருந்ததால், முன் வரிசையில் உங்களுக்கு இடம் ஒதுக்கப்பட்டு இருந்தது. இப்போது உங்களை அப்பதவியிலிருந்து நீக்கியதாக அதிமுக மாவட்ட செயலாளர் சண்முகநாதன் மாநகராட்சிக்கு கடிதம் அளித்துள்ளார். அந்த கடிதத்தின்படி அதிமுக சார்பில் புதிய கொறடாவாக நியமிக்கப்பட்டு உள்ள 57-வது வார்டு உறுப்பினர் ஜெயலட்சுமிக்கு அந்த இருக்கை ஒதுக்கப்பட்டு விட்டது. எனவே, நீங்கள் பின்னாடி சென்று உங்களுக்கு ஒதுக்கப்பட்ட இருக்கையில் உட்காருங்கள்” என மீண்டும் தெரிவித்தார்.
அதனையடுத்து, மந்திரமூர்த்தி “நான் பேச வேண்டும். எனவே மைக் தர வேண்டும்” என்றார். அதற்கு பதிலளித்த மேயர், “பின்னாடி சென்று உங்கள் இருக்கையில் உட்காருங்கள். மைக் தரப்படும். பேசுங்கள். இனிமேல் பழைய இருக்கை உங்களுக்கு நிச்சயமாக கிடையாது” உறுதிபட தெரிவித்தார். இதனை ஏற்க மறுத்த மந்திரமூர்த்தி மற்றும் ராமர் ஆகியோர் முன் வரிசைக்கு முன்பாக தரையில் அமர்ந்து கொண்டனர். அதனை தொடர்ந்து இருவரையும் தங்களின் இருக்கைக்கு சென்று உட்காருமாறும், தரையில் உட்காரக்கூடாது என்றும் மேயர் மீண்டும் கேட்டு கொண்டார். மேலும், “தீர்மானங்கள் வாசிப்பதை நிறுத்த வேண்டாம்” என்றும் கேட்டுக்கொண்டார்.
இதனை அடுத்து மந்திரமூர்த்தி, ராமர் ஆகிய இருவரும், தங்களை மைக்கில் பேச அனுமதிக்குமாறு ஆணையரை முற்றுகையிட்டனர். கூட்டம் தாமதம் ஆவதால் ஆத்திரம் அடைந்த மாமன்ற திமுக கவுன்சிலர்கள் ஒட்டுமொத்தமாக எழுந்து நின்று, அவர்கள் 2 பேரும் இருக்கையில் உட்கார வேண்டும் என்றும், முடியாவிட்டால் வெளியே செல்லுமாறும் குரல் எழுப்பினர். உடனே, மேயர் குறுக்கிட்டு, திமுக கவுன்சிலர்களை அமைதியாக உட்காருமாறும், 2 பேருக்கும் தான் பதில் சொல்லிக் கொள்வதாகவும் தெரிவித்தார். ஆனாலும் தொடர்ந்து, பல்வேறு கட்சிகளை சேர்ந்த உறுப்பினர்களும், தவெகவுக்கு தாவிய உறுப்பினர்கள் குறித்து கருத்துகளை முன்வைத்ததால் அவையில் சலசலப்பும், பதற்றமும் நீடித்தது.
இதனால் எரிச்சல் அடைந்த மேயர் ஜெகன் பெரியசாமி, கவுன்சிலர்களும் செய்தியாளர்களும் அவரவர் இடத்திற்கு சென்று உட்காருமாறு சத்தமாக பேசினார். மேலும், தவெகவுக்கு தாவிய 2 கவுன்சிலர்களிடம் உங்களின் இருக்கைக்கு சென்று உட்காருங்கள். அல்லது கிளம்புங்கள். இல்லையென்றால், உங்களை அப்புறப்படுத்த வேண்டி வரும்” என தெரிவித்தார். ஒரு கட்டத்தில், ராமரை பார்த்து ஜெயிக்க வைத்த கட்சியில் இருந்து இன்னொரு கட்சிக்கு மாறிய நீங்கள் துரோகி…” என்றும், மந்திரமூர்த்தியை பற்றி அதிமுககாரர்கள் பேசி கொள்வார்கள்” என்றும் காட்டமாக தெரிவித்தார். இதனையடுத்து, கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்வதாக கூறி, மந்திரமூர்த்தி, ராமர் ஆகியோர் கூட்ட அரங்கில் இருந்து வெளியேறினர்.
கூட்டம் முடிந்த பிறகு வெளியே வந்த மேயர் என்.பி.ஜெகன் பெரியசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்: மாநகராட்சி அலுவலகத்துக்குள் நான் நுழைந்த போது போலீசார் நிறைய பேர் நின்று கொண்டு இருந்தார்கள். காலையில் திமுக சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து, இங்கேயும் முன்னெச்சரிக்கையாக வந்து இருக்கிறார்களோ என நினைத்தேன். தவெகவுக்கு மாறிய மந்திரமூர்த்தி, மாநகராட்சி கூட்டத்தில் தனக்கு பாதுகாப்பு கேட்டு போலீசாரை வரவழைத்து இருப்பது பிறகுதான் தெரியும்.
கடந்த நான்கரை ஆண்டுகளாக வார்டில் உள்ள மக்கள் பிரச்சினைகளை பற்றி பேசாமல், சம்பந்தமே இல்லாமல் மாநில அளவிலான பிரச்சனையை மாநகராட்சி அவையில் பேசுவதும், அதனை வீடியோ எடுத்து ரீல்ஸ் போடுவதுமே மந்திரமூர்த்திக்கு வழக்கம். அதிமுகவில் கொறடா மாற்றப்பட்டுவிட்டதால், அவருக்கு மாற்று இடம் ஒதுக்கப்பட்டு உள்ளது. அதில் உட்காராமல் பழைய இடத்தில்தான் உட்காருவேன் என்று பிடிவாதம் செய்கிறார். பத்திரிகையாளர்களை கண்டவுடன் சத்தமாக பேசுகிறார். அதன் வழியாக அரசியல் விளம்பரத்தை தேடுகிறார் என தெரிவித்தார்.



