தருமபுரி, ஜூன் 9 –
தருமபுரி நகராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களின் தினக்கூலியை ஏமாற்றி வரும் ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்க கோரி சிஐடியு தருமபுரி மாவட்ட ஊரக வளர்ச்சி, உள்ளாட்சித்துறை ஊழியர்கள் சங்கத்தினர் தருமபுரி நகராட்சி அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தருமபுரி நகராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு அரசாணை எண். 2டி, 62-ன் படி நபர் ஒருவருக்கு வழங்க வேண்டிய தினக்கூலி ரூ.745 ஆகும்.தற்போது ஒப்பந்ததாரர் வழங்குவது நாளோன்றுக்கு ரூ.410 மட்டுமே வழங்கி வருகிறது. ஒரு தூய்மை பணியாளருக்கு ஒரு நாளைக்கு ரூ. 335 வீதம் ஏமாற்றி வருகின்றனர்.
மாதத்திற்கு ரூ. 10,050 ஏமாற்றி வருகின்றனர். 13 மாத காலமாக ஏமாற்றியதில் ஒரு தொழிலாளிக்கு ஒரு லட்சத்து முப்பதாயிரம் ரூ.1,30,000 பாக்கி உள்ளது. 130 ஒப்பந்த தூய்மை தொழிலாளர்களிடம் இந்த தொகை ஏமாற்றப்பட்டுள்ளது.
கடந்த ஒராண்டில் மட்டும் தொழிலாளியிடம் ஏமாற்றப்பட்ட தொகையான ஒரு கோடியே எழுபது லட்சத்தை ரூ.1,70,000,00 உடனே திருப்பி வழங்க வேண்டும். மாவட்ட நிர்வாகமும் தமிழக அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட துணைத்தலைவர் சி. குட்டியப்பன் தலைமை வகித்தார்.
சிஐடியு மாநில துணைத்தலைவர் சி. நாகராசன், மாவட்ட பொருளாளர் எஸ். சண்முகம், மாவட்ட துணைத்தலைவர்கள் சி. ரகுபதி,சி. அங்கம்மாள், சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஏ. சேகர், பொருளாளர் மணிகண்டன் மாவட்ட நிர்வாகிகள் எம். வெங்கட்டேசன், ஜி. வள்ளி, ஏ. சத்யா, ஏ. சின்னசாமி, வி. சிவா, ஜி. ராஜேஸ்வரி ஆகியோர் பேசினர்.



