நாகர்கோவில், ஏப். 28 –
தக்கலை அருகே உள்ள குமாரபுரம் பகுதியை சேர்ந்தவர் சில்வன்ஸ் மனைவி சுடர்லின் (49). இவர் தனது குடும்ப தேவைக்காக மேக்கா மண்டபத்தில் உள்ள தனியார் பைனான்ஸ் நிறுவனத்தில் தங்க நகைகளை அடகு வைத்து பணம் பெற்றுள்ளார். அங்கு அதிக வட்டி ஆனதால் நகைகளை மீட்டு ஸ்டேட் வங்கியில் வைக்க முயற்சித்து வந்து இருக்கிறார்.
அப்போது வீட்டு அருகில் காய்கறி கடை நடத்தி வரும் கலா பாய் என்பவர் அழகிய மண்டபத்தில் தனக்கு தெரிந்த தனியார் பைனான்ஸ் உள்ளதாகவும், அங்கு நகை கடனுக்கு குறைந்த வட்டி வசூலிப்பதாக கூறியுள்ளார். இதை தொடர்ந்து சம்பந்தப்பட்ட பைனான்ஸ் நிறுவனத்திற்கு சுடர்லின் சென்றுள்ளார். அவர்களும் அரசுடமையாக்கப்பட்ட வங்கியில் என்ன வட்டி உள்ளதோ அதைத்தான் நாங்களும் வாங்குகிறோம் கூடுதல் வட்டி கிடையாது என கூறியுள்ளனர். எந்த வித தாமதம் இல்லாமல் உடனடியாக பணத்தை பெறலாம் என கூறி இருக்கிறார்கள்.
இதை நம்பி சுடர்லின் 230 கிராம் தங்க நகைகளை ரூபாய் 12.50 இலட்சத்துக்கு அடகு வைத்துள்ளார்.
சில மாதங்களுக்கு பின் சம்பந்தப்பட்ட பைனான்ஸ் நிறுவனத்திற்கு சென்ற நகைகளை மீட்பது குறித்து கேட்டபோது, ரூ. 25 லட்சம் கட்ட வேண்டும் என கூறியுள்ளனர். அதன் பின்னர் தன்னை ஏமாற்றி மோசடியாக நகைகளை வாங்கியது தெரிய வந்தது. இது குறித்து சுடர்லின் கேட்டபோது அவர்கள் ஆபாசமாக பேசி மிரட்டி தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக அவர் திருவட்டாறு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
புகாரின் பேரில் அழகிய பாண்டிபரத்தை சேர்ந்த மன்சூர் அலி, பேச்சுப்பாரை சேர்ந்த பிஸ்மி, கப்பியரையை சேர்ந்த ஜெயசுதா, அழகியபாண்டி புரத்தைச் சேர்ந்த ஜானுஜா ஆகிய நான்கு பேர் மீது போலீஸ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


