நாகர்கோவில், ஆகஸ்ட் 25 –
மாநில அளவிலான அடைவு ஆய்வு எனப்படும் ‘ஸ்டேட் லெவல் அச்சீவ்மென்ட் சர்வே’ (எஸ்.எல்.ஏ.எஸ்) என்பது தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 3, 5, 8ம் வகுப்பு மாணவர்களின் கற்றல் திறனை தேசிய சராசரியுடன் ஒப்பிட்டு மாநிலத்தின் கற்றல் தரத்தை மதிப்பிடும் ஒரு முக்கிய ஆய்வாகும். இந்த ஆய்வு பள்ளிக்கல்வித்துறை மற்றும் மாநில திட்ட குழு இணைந்து நடத்துவதோடு மாணவர்களின் தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் பாடங்களில் உள்ள கற்றல் இடைவெளிகளை கண்டறிந்து கற்பித்தல் முறைகளை மேம்படுத்த உதவுகிறது.
தமிழ்நாடு மாணவர்களின் கற்றல் அடைவுத் திறனை அளவிடுதல், தேசிய சராசரியுடன் மாநிலத்தின் கல்வி தரத்தை ஒப்பிடுதல், கற்றல் இடைவெளிகளை கண்டறிந்து பாடங்களை மேம்படுத்துவதற்கான வழிமுறைகளை கண்டறிதல் இதன் நோக்கமாகும்.
இந்நிலையில் மாநில அளவிலான அடைவு தேர்வு மேலாய்வு கூட்டம் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரியில் இன்று நடந்தது. கூட்டத்தில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பால தண்டாயுதபாணி வரவேற்றார். குமரி மாவட்ட கலெக்டர் அழகுமீனா பேசினார். கற்றல் அடைவு திறன் அதிகரிக்க வேண்டிய பள்ளி தலைமை ஆசிரியர்களுடன் கலந்துரையாடல் நடந்தது. மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் சுந்தரராஜன் கற்றல் திறனை அதிகரிப்பதற்கான திட்டமிடல் குறித்து பேசினார். தொடர்ந்து தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமை வைத்து பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது: பள்ளி கல்வித்துறை சார்பில் ஸ்லாஸ் தேர்வு ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. மாவட்டம் சார்ந்து சிஇஓக்களிடம் சென்னையில் நடந்த ஆய்வுக் கூட்டத்தில் கேட்கப்பட்டது. இதில் பள்ளிகளில் உள் கட்டமைப்பு வசதிகள், மாணவர் சேர்க்கை குறைவு, மாணவர் இடைநிற்றல் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் தொடர்பாக ஆய்வு செய்யப்பட்டது.
இதில் ஸ்லாஸ் தேர்வில் குமரி மாவட்டம் நம்பர் ஒன் இடத்தில் உள்ளது. 10, 11, 12ம் வகுப்பு தேர்வுகளிலும் முன்னேற்றம் உள்ளது. தொடர்ந்து மாவட்டம் தோறும் ஆய்வு நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி இந்த ஆய்வு செய்யப்படுகிறது. குமரி மாவட்டத்தில் முஞ்சிறை வட்டாரம் சற்று குறைவாக தேர்ச்சி உள்ளது. அதனையும் வருங்காலத்தில் மேம்படுத்த வேண்டும். பள்ளி மாணவர்களின் கல்வித் தரத்தை மேலும் மேம்படுத்த வேண்டும்.
தமிழ்நாடு அரசு அதற்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. காலை உணவு திட்டம் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு நகர்ப்புற பகுதிகளிலும் செயல்படுத்தப்பட உள்ளது. எண்ணும் எழுத்தும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. 6 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு மெல்ல கற்பவர்களை மேம்படுத்த திறன் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. மணல் கேணி செயலி உருவாக்கப்பட்டுள்ளது. ஸ்டெம் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. தற்போது மாநில கல்விக் கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது. தலைமை ஆசிரியர்கள் மாநில கல்வி கொள்கைக்கும் தேசிய கல்விக் கொள்கைக்கும் என்ன வித்தியாசம் உள்ளது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். அதனை மாணவர்களிடமும், பெற்றோர்களிடமும், சமுதாயத்திடமும் எடுத்துச் சொல்ல வேண்டும். சிலர் தேர்வில் பின்தங்கிய பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் வகுப்புகளில் தனித்தனியே ஆய்வு மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார் நாகர்கோவில் மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலை) ஜெயராஜ் நன்றி கூறினார்.



