நாகர்கோவில், ஜூன் 23 –
மத்திய அரசின் உள்துறை சார்பில் தைரியமான மற்றும் மனிதாபிமானம் மிக்க பணிகளைச்செய்து உயிர்காக்கும் முயற்சியில் ஈடுபட்டு, மனித உயிர்களை காத்த நபர்களுக்கு ஜீவன் ரக்ஷா பதக் தொடர் விருதுகள் ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருது 3 பிரிவுகளாக வழங்கப்படுகிறது.
சர்வோத்தம் ஜீவன் ரக்ஷா பதக்கம் – மீட்பவரின் உயிருக்கு மிகவும் ஆபத்தான சூழ்நிலையில் உயிரைக் காப்பாற்றுவதில் வெளிப்படையான தைரியத்திற்காக வழங்கப்படுகிறது. உத்தம் ஜீவன் ரக்ஷா பதக்கம் – மீட்பவரின் உயிருக்கு பெறும் ஆபத்தில் இருக்கும் சூழ்நிலையில் உயிரைக் காப்பாற்றுவதில் தைரியமான செயலுக்காக வழங்கப்படுகிறது. ஜீவன் ரக்ஷா பதக்கம் – மீட்பவருக்கு உடல் காயம் ஏற்பட்ட சூழ்நிலையில் உயிரைக் காப்பாற்றிய செயலுக்காக வழங்கப்படுகிறது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் மேற்கண்ட செயல்கள் மூலம் ஒருவரின் உயிரை மனதாபிமான குணத்துடன் காப்பாற்றி இருந்தால் 2026-ஆம் ஆண்டிற்கான ஜீவன் ரக்ஷா பதக்கம் விருதுக்கு விண்ணப்பிக்கலாம். 01.10.2024-க்கு முன்னர் இச்செயல்களை புரிந்தவர்களுக்கு பொருந்தாது. ஆயுதப்படை பிரிவை சேர்ந்தோர் காவல் துறையின் மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்புப்பணி சேவைத்துறையினர் ஆகியயோர் தம்முடைய பணிநேரத்தில் அல்லாமல் இத்தகைய சேவை புரிந்திருந்தால் விண்ணப்பிக்கலாம்.
மேலும் இச்செயல்களை புரிந்த தகுதிவாய்ந்த நபர்கள், மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பான விபரங்கள் மற்றும் மீட்கப்பட்டவரின் விபரங்களை சுயவிபர படிவத்தில் பூர்த்தி (அதிகபட்சம் 250 வார்த்தைகள்) செய்து அனுப்பவேண்டும். 30.06.2026 தேதிக்கு பின்வரும் விண்ணப்பங்கள் தகவலின்றி நிராகரிக்கப்படும். மேலும் விபரங்களுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலக இணைப்பு கட்டிடத்தில் செயல்பட்டுவரும் மாவட்ட சமூகநல அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். என மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் தெரிவித்துள்ளார்.



