தஞ்சாவூர், ஆக.22:
தஞ்சாவூர் வட்டத்தில் உள்ள நியாய விலைக் கடைகளில் பி.ஓ.எஸ். மின்னணு சாதனங்கள் சர்வர் பிரச்சினையால் சுமார் 15 நாட்களாக இயங்கவில்லை எனக் கூறி, ரேஷன் கடை பணியாளர்கள் மின்னணு சாதனங்களை வட்ட வழங்கல் அலுவலரிடம் ஒப்படைத்து வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சர்வர் பிரச்சினையால் குடும்ப அட்டைதாரர்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை முறையாக வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக பணியாளர்கள் தெரிவித்தனர். இதனால் பொதுமக்களுக்கும், ரேஷன் கடை பணியாளர்களுக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் மற்றும் தகராறு ஏற்படுவதாகவும் கூறினர். பிரச்சினையை தீர்க்க உயர் அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என குற்றம்சாட்டினர்.
இதையடுத்து தமிழ்நாடு அரசு நியாய விலைக் கடை பணியாளர் சங்கத்தின் தஞ்சாவூர் வட்டத் தலைவர் பிரகாஷ் தலைமையில், வட்டச் செயலர் லோகநாதன், பொருளாளர் ரவி, மாவட்ட இணைச் செயலாளர் சிவகுருநாதன் முன்னிலையில் சுமார் 80 பணியாளர்கள் வட்ட வழங்கல் அலுவலகத்திற்கு சென்றனர்.
பின்னர் தங்களிடம் இருந்த பி.ஓ.எஸ். மின்னணு சாதனங்களை வட்ட வழங்கல் அலுவலர் ஹெலனியிடம் ஒப்படைத்துவிட்டு பணியாளர்கள் திரும்பிச் சென்றனர். இதனால் தஞ்சாவூர் வட்டத்தில் பெரும்பாலான நியாய விலைக் கடைகள் திறக்கப்படாமல் இருந்ததால் பொதுமக்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் வழங்குவதில் பாதிப்பு ஏற்பட்டது.



