நாகர்கோவில், அக்டோர் 11 –
உலக இடம் பெயர்வு பறவைகள் தினம் இன்று கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி குமரி மாவட்ட வனத்துறை சார்பில் இன்று காலை சாமிதோப்பு, புத்தளம், மணக்குடி காயல் உள்ளிட்ட பகுதிகளில் இடம்பெயர்வு பறவைகள் பற்றிய ஆய்வு நடந்தது. இதில் புத்தளம் பகுதியில் அதிகளவில் இடம்பெயர்வு பறவைகள் வந்திருந்தது தெரிய வந்துள்ளது. ரஷ்யா, சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகளில் இருக்கும் செங்கழுத்து உள்ளான், கொசு உள்ளான் உள்ளிட்ட பறவைகள் இருந்தன.
இதில் கொசு உள்ளான் பறவை சுமார் 20 முதல் 25 கிராம் எடை கொண்டதாகும். இவை எட்டாயிரம் கிலோ மீட்டர் தூரம் பறந்து குமரி மாவட்டத்தில் உள்ள புத்தளத்திற்கு வந்துள்ளதாக பறவைகள் இன ஆராய்ச்சியாளர் கூறினர். பறவைகள் ஆராய்ச்சியாளர்களுடன் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளும் இதில் பங்கேற்றனர். மாவட்ட வன அலுவலர் அன்பு கூறுகையில், சாமிதோப்பு, புத்தளம் சதுப்பு நிலப்பகுதியை பறவைகள் பாதுகாப்பு பகுதியாக அறிவிக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக கூறினார்.


